Wednesday, 26 November 2025

முஹத்திஸீன்களது வஸீலா

ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ  رَحِمَهُ ٱللَّٰهُ  மற்றும் இமாம் தஹபீ رَحِمَهُ ٱللَّٰهُ   ஆகிய இரு மகத்தான முஹத்திஸ்களும், ஹதீஸின் உஸூல்கள் மற்றும் அஸ்மாஉர்ரிஜால் அறிவின் அடிப்படையில் வலிமார்களிடம் உதவி கோருவது மற்றும் அவர்களை வஸீலா ஆக்குவது பற்றி விளக்கிய அகீதா (நம்பிக்கை) பின்வருமாறு:

ஹஜ்ரத் அபூ அலீ நைஷாபூரீ رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைவு: 349 ஹிஜ்ரீ) அவர்கள் கூறுகிறார்கள்:

“நான் மிகவும் கடுமையான கஷ்டத்திலும் துன்பத்திலும் இருந்தேன். அப்போது எனக்கு கனவில் அண்ணல் நபி ரசூலுல்லாஹ்  ﷺ அவர்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அப்போது ஏந்தல் நபி  ﷺ  அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

‘யஹ்யா பின் யஹ்யா அவர்களின் கப்றிடம் செல், அங்கு நீ இஸ்திஃபாரும் (பாவமன்னிப்புக் கோருதலும்) செய், அவரை வஸீலாவாக வைத்து உதவி கோரு; அப்போது உன் கஷ்டம் நீங்கிவிடும்.’

நானும் அவ்வாறே செய்தேன்; மறுநாளே என் துன்பம் நீங்கிவிட்டது.”

( இமாம் யஹ்யா பின் யஹ்யா رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களின் மறைவு : 226 ஹிஜ்ரீ)

ஆதார  நூல் 📕தஹ்தீபுத் தஹ்தீப், தொகுதி 4, பக்கம் 398

இப்போது எந்த வஹ்ஹாபியோ, தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரோ அல்லது அஹ்லே ஹதீஸ் உடையவராவது இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ மற்றும் இமாம் தஹபீ ஆகியோரை கப்ரு வணக்கம் செய்பவர்கள்,ஷிர்க் செய்பவர்கள் ( நவூதுபில்லாஹ் ) என்று  ஃபத்வா கொடுக்கத் துணிவாரா?


Friday, 21 November 2025

பூமான்   ‎நபி ‎அவர்களை ‎நிந்தனை ‎செய்ததற்கான ‎தீர்ப்பு



  இஸ்லாமிய கிலாபத்தில் பூமான் நபி  ﷺ அவர்களை நிந்தனை செய்ததற்கான மார்க்கத் தீர்ப்பு : 

பிரசித்திபெற்ற முஃபஸ்ஸிர் ஹழ்ரத் ஷெய்கு இஸ்மாயில் ஹக்கீ رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள், சூரா அபஸா-வின் முதல் ஆயத்தின் தஃப்ஸீரில் எழுதுகிறார்கள்:

பாரூக்குல் அஃலம் அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه  அவர்களின் கிலாஃபத்தில் , ஒரு முனாஃபிக் மஸ்ஜித் இமாம் ஒரு பழக்கம் வைத்திருந்தான். அவன் பெரும்பாலும் ஃபஜ்ர் தொழுகையில் சூரா அபஸா (சூரத் அபஸா வ தவல்லா) ஓதுவான்.

 இதன் மூலம் அவன் உள்ளத்தில் இப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்திக் கொள்வான்: “இந்த சூரா அல்லாஹ் தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கண்டிப்புச் செய்த சூராவாகும்” (மஆஸல்லாஹ்).

இந்த விஷயம் ஹஸ்ரத் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களுக்கு தெரிய வந்தபோது – முனாஃபிக்குகளில் ஒருவன் தன் சமூகத்திற்கு இமாமத்து செய்து, ஜமாஅத்துடன் தொழுகையில் எப்போதும் சூரா அபஸா ஓதி வருகிறான் என்று – உடனே அவனை அழைத்து வரச் செய்தார்கள். 

மேலும் எந்த விசாரணையும் செய்யாமல், அந்த அல்லாஹ்வின் ஹபீபை அன்றாடம் நிந்தனை செய்வதை தமது கடமையாகவே வைத்திருந்த இமாமின் கழுத்தை துண்டித்தார்கள்.

**குறிப்பு :**  
வெளிப்பார்வைக்கு அவன் குர்ஆனைத்தான் ஓதினான். ஆனால் ஆயத்தின் தவறான அர்த்தத்தை எடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்தை தாழ்த்தும் நோக்கத்துடன் செய்தான். அதனால் அவனுக்கு இந்த முடிவு ஏற்பட்டது. அவனுடைய குர்ஆன் ஓதுதலும், மஸ்ஜித் இமாமாக இருந்ததும் எதுவும் உதவவில்லை. ஏனெனில் அவன் ஈருலகின் இரட்சர் அண்ணல் நபி   ﷺ அவர்களை அவமரியாதை செய்தவன் ஆவான்.

ஆதார நூல் 
தஃப்ஸீர் ரூஹுல் பயான்  
பாகம் 10, பக்கம் 336

Monday, 10 November 2025

நபிமார்களைக் கொண்டு வஸீலா

🌹நபிமார்களைக்  கொண்டு வஸீலா 🌹

நாயகத் தோழர் ஹழ்ரத ஸெய்யிதினா அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் , 

" அறிவின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه அவர்களது தாயார் ஸெய்யிதா பாத்திமா பின்த் அஸத் இப்னு ஹிஷாம் رضی الله عنها அவர்கள் மவ்த்தான பொழுது அங்கு வந்த கண்மணி நாயகம்  ﷺ அவர்கள்  அன்னாரின் தலைமாட்டில் அமர்ந்து,

' என்னுடைய தாயார் அவர்களே !  அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக. என்னுடைய தாயாருக்குப் பின் எனக்கு தாயாக இருந்தீர்கள்.தாங்கள் பசித்திருந்து எனக்கு வயிறார உணவளித்தீர்கள்.தங்களுக்கு ஆடை இல்லாத பொழுது எனக்கு ஆடை அணிவித்தீர்கள்.

நல்ல உணவை தங்களுக்கு தடுத்து எனக்கு ஊட்டினீர்கள்.இவற்றால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் ,மறுமை வெற்றியையும் நாடினீர்கள்." என்றுரைத்தார்கள்.

பின்னர் ஜனாஸாவை குளிப்பாட்டவும்,மூன்று முறை தண்ணீர் ஊற்றவும் பணித்தார்கள்.கற்பூரம் கலந்த நீரால் குளிப்பாட்டும் நேரமான பொழுது தமது திருக்கரங்களால் அவர்கள் மீது ஊற்றினார்கள்.பின்னர் தாம் அணிந்திருந்த சட்டையை கழற்றிக் கொடுத்து அணிவிக்கச் செய்தார்கள்.அதன்மீது கஃபன் ஆடை அணிவிக்கப்பட்டது.

பின்னர் பெருமானார்  ﷺ அவர்கள் ஸஹாபா பெருமக்களான ஹழ்ரத் உஸாமா இப்னு ஜைத்,ஹழ்ரத் அபூஅய்யூப் அன்சாரி ,பாரூக்குல் அஃலம் ஹழ்ரத்  உமர் கத்தாப் மற்றும் ஓர் கருப்பு அடிமைச் சேவகர் ஆகியோரை அழைத்து கப்ரை தொண்டச் சொன்னார்கள்.

அவர்கள் கப்ர் தோண்டினர்.பின்னர் கப்ரின் அடிப்பகுதியானதும் பெருமானார்  ﷺ அவர்கள் கப்ரின் உள்ளே இறங்கி,ஒருக்களித்து சாய்ந்து படுத்துக் கொண்டு , ' அல்லாஹ் உயிர் கொடுப்பவனும்,மரணிக்கச் செய்பவனும் ஆவான்.அவன் நித்திய ஜீவனும்,மரணமற்றவனுமாவான்.

யா அல்லாஹ் ! உன்னுடைய நபிமார்களுடையவும்,எனக்கு முன்னால் வந்த நபிமார்களுடையவும் பொருட்டால் என்னுடைய தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களுக்கு நீ பிழை பொறுத்தருள்வாயாக ! 

அவர்களுக்கு ( கப்ரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல) ஆதாரத்தை மொழியச் செய்வாயாக ! அவர்கள் புகுமிடத்தை நீ விசாலப்படுத்துவாயாக ! நிச்சயமாக கருணையாளர்களில் நீயே கருணையாளன் " ( என்று துஆ செய்து விட்டு ) நான்கு முறை தக்பீர் சொல்லி தொழ வைத்தார்கள்.

பின்னர் பெருமானார்  ﷺ அவர்களும்,ஸெய்யிதினா அப்பாஸ் رضي الله عنه அவர்களும் ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் رضي الله عنه அவர்களும் சேர்ந்து கப்ருக்கள் ஜனாசாவை வைத்தனர்.

ஆதார நூல் 📕 இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ ,முஃஜமுல் கபீர் ,ஹதீஸ் எண் 871,முஃஜமுல் அவ்ஸத் ,ஹதீஸ் எண் 189

Saturday, 8 November 2025

பூமான் நபி ‎ﷺ ‏அவர்களது கன்னிப் பேச்சு

🌹 பூமான் நபி  ﷺ அவர்களது கன்னிப் பேச்சு 🌹

ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஃபத்ஹுல் பாரீ ஷர்ஹு ஸஹீஹில் புகாரியிலும், இமாம் அல்வாஃகிதீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது ஸீராவிலும் குறிப்பிடுகிறார்கள்:

“அல்லாஹ்வின் நபி ﷺ பிறந்த உடனேயே தொட்டிலில் பேசினார்கள்.”

இமாம் இப்னு ஸபா رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் தமது கஸாயிஸில் குறிப்பிடுகிறார்கள்:

“கண்மணி நாயகம் ﷺ அவர்களின்  தொட்டில் மலக்குகளின் அசைவோடு அசைந்து கொண்டிருக்கும்.”

அல்லாஹ்வின் ஹபீப்  ﷺ   அவர்கள் பால் கழித்தவுடன் முதல் முறையாக உச்சரித்த திக்ர் ! 

இமாம் பைஹஃகீ رَحِمَهُ ٱللَّٰهُ மற்றும் இமாம் இப்னு அஸாகிர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நாயகத் தோழர் ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் رضي الله عنه வழியாக அறிவிக்கிறார்கள்:

அன்னை ஸய்யிதா ஹலீமா رضی الله عنها அவர்கள் கூறினார்கள்:

 “நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு முதல் முறையாக பால் கழித்த போது, அவர்கள் பேச ஆரம்பித்து இவ்வாறு கூறினார்கள்:

 **‘அல்லாஹு அக்பர் கபீரா’**  
(அல்லாஹ் மிகப் பெரியவன், மகத்தான பெரியவன்)  
**‘வல்ஹம்து லில்லாஹி கஸீரா’**  
(அல்லாஹ்வுக்கே மிகுதியான புகழ் அனைத்தும்)  
 **‘வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதன் வ அஸீலா’**  
 (காலையிலும் மாலையிலும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்).

இந்த வார்த்தைகளால் அவர்கள் பேசினார்கள். அவர்கள் வளர்ந்து கொண்டே வந்த போது, வெளியே சென்று குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பார்கள், ஆனால் அவர்களை விட்டு விலகியே இருப்பார்கள்.”

[ஆதார நூல் 📕 இமாம் கஸ்த்தலானி رَحِمَهُ ٱللَّٰهُ,  அல்-மவாஹிபுல் லதுனிய்யா, தொகுதி 1, பக்கம் 81]

Related Posts Plugin for WordPress, Blogger...