இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது சமகாலத்தவரும்,ஸஹீஹ் புஹாரியின் புகழ்பெற்ற விளக்கவுரையான " இர்ஷாத் அல்சாரி பீ ஷரஹுல் புஹாரி" யின் எழுத்தாளருமான மிஸ்ர் நாட்டைச் சார்ந்த இமாம் ஷஹாபுத்தீன் அபுல் அப்பாஸ் கஸ்த்தலானி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள்( மறைவு 924 ஹிஜ்ரி) தமது உலகப் புகழ்பெற்ற நூலான அல்மவாஹிபுல்லதுனியாவில்
எழுதுகின்றார்கள்,
எம்பெருமான் முஹம்மது நபி ﷺ அவர்களின் பிறந்த இரவு மூன்று காரணங்களால் உயர்ந்தது:
முதல் காரணம்:
மவ்லித் இரவில் அண்ணல் நபி ﷺ அவர்கள் இவ்வுலகிற்கு வந்தார்கள், அதேசமயம் லைலத்துல் கத்ர் (விதியின் இரவு) அவர்களது பிறந்த பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே, அண்ணல் நபி ﷺ அவர்களின் வருகை, அவர்களுக்கு வழங்கப்பட்டவற்றை விட உயர்ந்தது. ஆகவே, மவ்லித் இரவு மிகவும் புண்ணியமானது.
இரண்டாவது காரணம்:
லைலத்துல் கத்ர் இரவு புண்ணியமானது, ஏனெனில் அந்த இரவில் மலக்குகள் (வானவர்கள்) இறங்குகின்றனர். ஆனால், மவ்லித் இரவில் பூமான் நபி ﷺ அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்கள். ஸெய்யிதுல் அன்பியா பூமான் நபி ﷺ அவர்கள் மலக்குகளை விட உயர்ந்தவர்கள். எனவே, மவ்லித் இரவு மிகவும் உயர்ந்தது.
மூன்றாவது காரணம்:
லைலத்துல் கத்ர் இரவு மூலம் எம்பெருமானார் முஹம்மது ﷺ அவர்களின் உம்மத்திற்கு மேன்மை வழங்கப்பட்டது. ஆனால், மவ்லித் இரவு மூலம் அனைத்து படைப்புகளுக்கும் பாக்கியம் வழங்கப்பட்டது, ஏனெனில் காத்தமுந்நபியான முஹம்மது ரஸுல் ﷺ அவர்கள் உலகங்களுக்கு ரஹ்மத்தாக (கருணையாக)- ரஹ்மதுல்ஆலமீனாக அனுப்பப்பட்டார்கள் (குர்ஆன் 21:107). ஆகவே, இந்த ரஹ்மத் அனைத்து படைப்புகளுக்கும் பொதுவானதாக ஆனது.
📕 ஆதார நூல் : இமாம் கஸ்தல்லானி (رَحِمَهُ ٱللَّٰهُ) அல்-மவாஹிப் அல்-லதுனிய்யா, தொகுதி 1, பக்கம் 145. மேலும், இமாம் ஸர்கானி (رَحِمَهُ ٱللَّٰهُ) அவர்களின் ஷரஹு அல்-முவாஹிப் லுதுன்னியா, தொகுதி 1, பக்கங்கள் 255-256-ல் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இமாம் கஸ்தல்லானி (رَحِمَهُ ٱللَّٰهُ) மேலும் கூறினார்கள. :
"நபியவர்களின் பிறந்த மாதத்தின் இரவுகளை கொண்டாட்டமாக மாற்றுபவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! இதன் மூலம், இதயத்தின் நோய் மற்றும் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் குறையும்." [அல்-மவாஹிப், தொகுதி 1, பக்கம் 148]
No comments:
Post a Comment