Wednesday 1 July 2020

வஸீலா - 6


ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி 
ஹழ்ரத்  رحمه الله 


"வஸீலா!"


இப்பதம் அரபிமொழி அகராதியில் ஏதாவதொரு பொருளை
தனது நாட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தனக்கும்
இன்னொரு பொருளுக்குமிடையே ஒன்றை இடையிலாக்கிக்
கொள்வதற்கு "வஸீலா" என்று சொல்லப்படும். இனி ஷரீஅத்தில்
நல்ல அமலையும் நல்லடியார்களையும் அல்லாஹ்வுக்கும்
அடியானுக்கும் இடையிலாக்கிக் கொள்வதுதான் வலீலாவாகும். இந்த வகையில்தான் நல்லமலும் நல்லடியார்களும் வஸீலாவாக இருக்கின்றனர்.

குத்பே மதீன ஹழரத் மௌலானா ஜியாவுத்தீன் அஹ்மத்
மதனீ  رحمه الله (இமாம் அஹ்மத் ரிழா கான் பாஜிலே பரேல்வி  رحمه الله அவர்களின் கலீபா) அவர்களிடம் ஒருவர் வந்து, வஸீலா ஆகுமான ஒன்றென்பதற்குரிய
ஆதாரமென்ன? என்று கேட்க, அதற்கவர்கள்,...

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ

"விசுவாசிகளே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும்
அவனளவில் வஸீலாவையும் தேடுங்கள்"
[ஸுரா மாயிதா ,வசனம் 35]

என்னும் திருக்குர்ஆனுக்குரிய வசனத்தை ஓதிக் காட்டினர்.
அதற்கவர், இந்த ஆயத்தில் வஸீலா என்பது நல்ல அமல்
என்று தானென்று சொல்ல, ஹழ்ரத் அவர்கள்; அவரை நோக்கி,
நம்முடைய அமல் அங்கீகரிக்கப்பட்டதா அல்லது தள்ளப்
பட்டதா? அதற்கென்ன ஆதாரம்? என்று கேட்க, அதற்கவர்,
அது எனக்கெப்படி தெரியும்? என்று சொல்ல, மீண்டும்
ஹழ்ரத் அவர்கள்; அண்ணல் நபி صلى الله عليه و سلم 
அவர்கள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்
இல்லையா என்று கேட்க, அதற்கவர்; நிச்சயமாக அங்கீகரிக்க
பட்டவர்கள் தான் அதிலென்ன சந்தேகம்? என்று சொல்ல,
அதுகேட்ட ஹழ்ரத்தவர்கள்; அப்படியானால் நல்லமலை 
வஸீலாவாக்க முடியும். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டத்தற்குரிய ஆதாரமில்லாத நிலையில் என்னும் போது அல்லாஹ்வால்
ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களென்னும் ஆதாரமுள்ள நிலையிலுள்ள நபியவர்கள் ஏன் வஸீலாவாக்க முடியாது என்று கேட்டனர் .


இறைவனிடம் நல்லமலையும் நல்லோரையும் வஸீலாவாக்குதல்: 

அண்ணல் நபி  صلى الله عليه و سلم அவர்கள்
நவின்றனர்.



"அல்லாஹ்  இருவகையான பாதுகாப்பை எனக்கு 
இறக்கித் தந்திருக்கிறான். அதிலொன்று, "எதுவரை நீங்கள் 
அவர்கள் மத்தியில் இருப்பிர்களோ  அதுவரை அவர்களை 
அல்லாஹ் வேதனை செய்யமாட்டான் என்பதும்
இன்னொன்று, எதுவரை அவர்கள் பாவமன்னிப்பு தேடிச்
கொண்டிருப்பார்களோ அதுவரை அவர்களை அல்லாஹ்
வேதனை செய்ய மாட்டான் என்பதுமாகும். "
[நூல்: திர்மிதி. பக்கம் 439.]

முந்திய வசனத்தில் வேதனை செய்யப்படுவதிலிருந்து
பாதுகாக்கப்படுவதற்குரிய வஸீலாவாக அண்ணல் நபி 
 صلى الله عليه و سلم  அவர்களையும், இரண்டாவது
வசனத்தில் பாவமன்னிப்புக்குரிய நல்லமலையும் குறிப்பிடப்படுவதை பார்க்கிறோம்.


அடுத்து ஹழ்ரத் ஸெய்யிதினா அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அண்ணல் நபி  صلى الله عليه و سلم அவர்கள் நவின்றதாக அறிவிக்கின்றனர் , " தலைவிரிகோலமாக உள்ள பெரும்பான்மையோர் வாசல்படியிலிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர் . அவர்கள் அல்லாஹ்விடம் சத்தியம் செய்து கேட்பார்களாயின் அல்லாஹ் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருகின்றான் ."
[நூல் :மிஷ்காத் ,பக்கம் 446]



இவ்வாறே ஹழ்ரத் ஸெய்யிதினா மிஸ்அப் பின் ஸஃத்  رضي الله عنه  அவர்கள் அண்ணல் நபி  صلى الله عليه و سلم அவர்கள் நவின்றதாக அறிவிக்கின்றனர் , "உங்களுக்கு உதவியும் ,இரணமும் உங்களிலுள்ள பலவீனர்களின் காரணமாகக் கிடைக்கின்றது ".
[நூல் : மிஷ்காத் , பக்கம் 446 ]


 அமீருல் முஃமீனின்  ஹழ்ரத் ஸெய்யிதினா  அலி  رضي الله عنه  அவர்கள் கூறினர் . நான் அண்ணல் நபி  صلى الله عليه و سلمஅவர்கள் சொல்லக் கேட்டேன் . " அப்தால்கள் என்போர் ஷாம் தேசத்தில் இருப்பர் .அவர்கள் மொத்தம் நாற்பது பேர்களாகும் . இனி அவர்களில் ஒருவர் மறைந்துவிட்டால் அந்த இடத்தில வேறொருவர் அமர்த்தப்படுகிறார் . அவர்கள் பொருட்டே மழை பொழிகின்றது . இன்னும் அவர்கள் பொருட்டே எதிரிகளிடமிருந்து வெற்றியும் ,உதவியும் உங்களுக்கு கிடைக்கின்றது . இன்னும் அவர்கள் பொருட்டாலே ஷாம் தேசத்தவர் மீது இறக்கப்படும் வேதனையும் அகற்றப்படுகின்றது ".
[நூல் :மிஷ்காத் ,பாகம் 3,பக்கம் 582]

ஹழ்ரத் ஸெய்யிதினா அபூதர்தா  رضي الله عنه  அவர்கள் அண்ணல் நபி  صلى الله عليه و سلم அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றனர் ," நீங்கள் உங்களில் பலவீனமானவர்களிடம்  எனது திருப்தியைத் தேடுங்கள் .  அவர்களில் என்னைத் தேடுங்கள் . ஏனெனில் உங்களிலுள்ள பலவீனமானவர்களின் பொருட்டாலே உங்களுக்கு இரணமும் வெற்றியும் ,உதவியும் அளிக்கக்கப்படுகின்றது ."
[நூல் :மிஷ்காத் ,பக்கம் 447]

பலவீனமானவர்கள் என்பதில் ஒரு சாரார் வறுமைக்கு ஆளாகி இருப்போர் . இன்னொரு சாரார் அதிகமான வணக்க வழிபாடுகளின் காரணமாக ஃபக்கீர்களாக இருப்பவர்கள். இதில் இரண்டாவது சாராரே (அவ்லியாக்கள் )
வஸீலாவாகுவதற்கு முழுக்க முழுக்க தகுதியானவர்களாகும் .


அடுத்து ஹழ்ரத் ஸெய்யிதினா உமையா பின் காலித்  رضي الله عنه  அவர்கள் அண்ணல் நபி  صلى الله عليه و سلم அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றனர் ,அதாவது "அண்ணல் நபி  صلى الله عليه و سلم அவர்கள் ஃபுகராக்கள் மற்றும் முஹாஜிரீன்களின் வஸீலாவைக் கொண்டு உதவிக்கும் ,வெற்றிக்குமுரிய துஆ செய்பவர்களாக இருந்தார்கள் ".
[நூல் : மிஷ்காத் ,பக்கம் 447]


ஹழ்ரத் முல்லா அலி காரி رحمه الله அவர்கள் கூறுகின்றனர் , "இப்னுல் மலிக் என்பார் சொல்கிறார் ,அண்ணல் நபி  صلى الله عليه و سلم அவர்கள் தங்களிலுள்ள ஃபகீர் மற்றும் முஹாஜிர்களை முன்னிறுத்தி ,எங்களுக்கு விரோதிகளுக்கு எதிராக உதவி செய்வாயாக எனக் கேட்பவர்களாக இருந்தனர் ". 
[நூல் :மிர்காத் ,பாகம் 10,பக்கம் 13]

அண்ணல் நபி  صلى الله عليه و سلم அவர்கள் அல்லாஹ்வுக்கு மிக மிகப் பிரியமானவர்கள் . அவர்கள் எதைக் கேட்டாலும் அல்லாஹ் நிறைவேற்றித் தருவான் என்னும் போது தங்களிலுள்ள ஃபக்கீர்களையும் , முஹாஜிர்களையும் வஸீலாவாக்க வேண்டிய அவசியமென்ன ?

எனில் இது அவர்களை கண்ணியப்படுத்துவதற்காகவும் , தமது சமுதாயத்தினரும் இவர்களை வஸீலாவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவும் பூமான் நபியவர்களால் நடத்திக் காட்டப்பட்ட நடைமுறையாகும் . அவ்வாறாயின் நபித்தோழர்களை வஸீலாவாக்க முடியும் எனும்போது நபியவர்களை வஸீலாவாக்க ஏன் முடியாது ?

இதைக் கொண்டு வெறும் நல்லமலை வஸீலாவாக்குவதை விட நல்லோரை வஸீலாவாக்குவதே ஏற்றமாகும் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம் .





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...