Thursday 23 July 2020

வஸீலா -11

ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி 

ஹழ்ரத்  رحمه الله







வஸீலாவும் ,உலமாக்களில் உள்ள இமாம்களும் :


வஸீலாவைக் குறித்து உலமாக்களிலுள்ள இமாம்களின் செய்திகளையும் ,சம்பவங்களையும் நாம் தொகுக்கத் துவங்கினால் அதுவே ஒரு மிகப்பெரிய நூலாக விரிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆதலால் இங்கே குறிப்பிட்ட சிலரது செய்திகளை மட்டும் உங்களின் மேலான பார்வைக்கு தருகிறோம் ....

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه அவர்கள் பயணத்தின் ஒழுங்குமுறை பற்றி ,....

பயணத்தின் இன்னொரு பகுதியில் நபிமார்கள், ஸஹாபாக்கள், தாபிஈன்கள் ,மற்றுமுள்ள வலிமார்கள்,உலமாக்கள் போன்றோரை ஸியாரத்துச் செய்வதாகும் . இதில் ஒருவர் வாழுகின்ற காலத்தில் யாரை சந்திப்பதன் மூலமாக பரக்கத்து பெறப்பட்டதோ அவரது இறப்புக்குப் பின்னாலும் அவரைக் கொண்டு பரக்கத்தைப் பெற முடியும் என்று கூறுகின்றனர் .

இமாம் இப்னுல் ஹாஜ் . இவர்கள் மார்க்க சம்பந்தமான விஷயத்தில் மிகவும் கடுமையானவர்கள் . இவர்கள் நபிமார்கள் , வலிமார்கள் குறிப்பாக அண்ணல் நபி அவர்களிடம் வஸீலா தேடுவதைக் குறித்தும் உதவி தேடும் முறை குறித்தும் விரிவாகவும் ,அதேநேரம் சுருக்கமாகவும் விபரித்துள்ளார்கள். அவைகளிலிருந்து சிலவற்றை மட்டும் உங்களின் பார்வைக்கு இங்கே எடுத்துக் காட்டுகிறோம் .

ஒருவேளை இறந்தவர் ஒரு பாமரராக இருப்பாராயின் அவரது கப்ரை ஸியாரத்துச் செய்வதற்குரிய முறையானது , கிப்லாவின் பக்கமாக அமர்ந்து கப்ரை முன்னோக்க வேண்டும். அதன்பின் முதலில் அல்லாஹ்வை புகழ்ந்து பின்னர் நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் மீது ஸலவாத்து சொல்லி இயன்றவரை அக்கப்ராளிக்காக   துஆ  செய்ய வேண்டும் . பின்னர் ....


"அந்த கப்ருக்கு போய் துஆ செய்ய வேண்டும் . இனி அக்கப்ராளியின் மீதோ அல்லது முஸ்லிம்கள் மீதோ ஏதோ துன்பம் இறங்குமாயின் அல்லாஹ்விடம் அழுது அத்துன்பம் அக்கப்ராளியை விட்டும் முஸ்லிம்களை விட்டும் நீங்க வேண்டுமென துஆ செய்ய வேண்டும் ."
[ நூல்: அல் முத்கல் ,பாகம் -1,பக்கம் 248 ]


"பின்னர் தமது நாட்டங்கள் நிறைவேறுவதற்காகவும் ,பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவும் வலிமார்களின் வஸீலாவை முன்னிறுத்த வேண்டும் . அதன்பின் தனக்காகவும் தனது பெற்றோருக்காகவும், உறவினர்களுக்காகவும், ஷைகுமார்களுக்காகவும் ,அக்கப்ராளிகளுக்காகவும் மற்றும் உயிரோடுள்ள இறந்து போய்விட்ட முஸ்லிம்களுக்காகவும், இன்னும் மறுமை நாள்வரை வரவிருக்கும் தனது சந்ததிகளுக்காகவும்,மற்றும் மறைவாக இருப்பவர்களுக்காகவும் துஆ செய்ய வேண்டும்.

இன்னும் அந்த வலிமார்களின் முன்னால் நின்று மிகவும்
தாழ்மையாக அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.
அப்போது அதிகமாக அவர்களின் வஸீலாவை முன்னிருத்த
வேண்டும். ஏனெனில் அல்லாஹ் அவர்களை தனது வஸீலாவாக
தேர்ந்தெடுத்திருக்கிறான். அத்துடன் அவர்களை கண்ணியத்தை கொண்டும் கராமத்தை கொண்டும் அழகு படுத்தியிருக்கிறான்.

எவ்வாறு உலகிலுள்ள போது அவர்களை கொண்டு
பிரயோஜனத்தை அருள்புரிந்தானோ அதேபோல மறுமையில்
அதைவிட பன்மடங்கு அதிகமான பிரயோஜனமுண்டு. இனி
எவரேனும் எதையாவது நாடுவாரேயாயின் அவர் அவர்களிடம் சென்று அவர்களின் வஸீலாவை முன்னிருத்த வேண்டும்.ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும் இடையே வாஸிதாவாக இருக்கின்றனர்.

மேலும் ஷரீஅத்தில் அல்லாஹ் அவர்களை எந்த அளவுக்கு
கண்ணியப்படுத்தி உள்ளான் என்பது நமக்கு தெரிந்தது மட்டுமின்றி உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது.மேலும் கிழக்கு மேற்கு பகுதியைச் சேர்ந்த மகத்தான உலமாக்களும், தலைவர்களும் வலிமார்களின் கப்ரை  ஸியாரத்து செய்வது கொண்டு பரக்கத்தை பெற்றுள்ளனர் என்பது மிகவும்  பிரபலமானதாகும் . மேலும் உணர்வளவிலும்,எதார்த்தத்திலும் அவர்களின் பரக்கத்தை பலரும் பெற்று வந்துள்ளனர் .
[நூல்: அல்முத்கல் , பாகம் -1, பக்கம் -249]


பின்னர் அஷ்ஷைகு இமாம் அபூ அப்துல்லாஹ் பின்  நுஃமான்  رحمه الله  அவர்கள்  சொல்வதை நகல் செய்கின்றனர் .....


" அகப்பார்வையுடையோரிடம் அவர்களின் திடமான நம்பிக்கையைக் கொண்டு ஆதாரப்படுத்தப்பட்டுள்ளதாவது ,வலிமார்களின் கப்ருகளை ஸியாரத்துச் செய்வதானது பரக்கத்தையும் , படிப்பினையையும் பெற்றுக் கொள்வதற்குரிய விரும்பத்தக்க ஒன்றாகும். ஏனெனில் வலிமார்களின்  பரக்கத்தானது அவர்களின் வெளித்தோற்ற வாழ்கையைப் போன்றே அவர்களது மறைவுக்குப்  பின்னரும் நிகழுகின்றது. பின்னும் வலிமார்களின் கப்ருகளில் துஆ செய்வதும் ,அவர்களை வஸீலாவாக்குவதும் நமது முஹக்கிக்கீன்கள் மற்றும் இமாம்களின் வழக்கமாகும் ."
[ நூல் : அல் முத்கல் , பாகம் 1,பக்கம் 249 ] 

இதன்பின் நபிமார்கள் ,ரஸுல்மார்கள் போன்றோரின் புனிதமிகு கப்ருகளை ஸியாரத்துச் செய்வதற்குரிய முறை பற்றி இவ்வாறு கூறுகின்றனர் ....

  
 " நபிமார்கள் மற்றும் ரஸுல்மார்கள் போன்றோரின்
மகத்தான சன்னிதானத்திற்கு ஸியாரத்திற்காக செல்வோர்
தொலைவிலிருந்தே ஸியாரத்துச் செய்வது கண்டிப்பாக அவசியமாகும். இன்னும் அப்பரிசுத்தவான்களின் சன்னிதானத்திற்கு வருகை தருவோர் மிகவும் தாழ்மையாக, பணிவாக,தழுதழுத்த மெதுவான குரலில் தனது நாட்டத்தை கேட்கவேண்டும்.

அத்துடன் தனது உள்ளத்தை அவர்கள் முன் ஆஜர்படுத்த வேண்டும்.முகக்கண்ணைவிட்டு அகக்கண்ணால் அவர்களது ஸியாரத்தை முன்னோக்க வேண்டும். ஏனெனில் நபிமார்களின் புனித தேகத்தில் எந்தவொரு பாதகமோ அல்லது மாற்றமோ எப்போதும் நிகழ்வதில்லை. அதன்பின் அல்லாஹ்வை புகழ்ந்து நபிமார்களின் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும்.அவர்களின் தோழர்களுக்காக இறை திருப்தியை கேட்க
வேண்டும்.

 இவ்வாறே இறுதிநாள் வரை அத்தோழர்களின்
அடிச்சுவட்டில் நடப்போருக்காக ரஹ்மத்தை கேட்க வேண்டும்.
அதன்பின் தனது நாட்டம் நிறைவேறுவதற்காகவும் தமது
பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவும் அல்லாஹ்விடம்
அவர்களை வஸீலாவாக்க வேண்டும். இன்வர் அவர்களை
கொண்டு தனக்கு உதவி கிடைக்க வேண்டுமென கேட்க
வேண்டும். அத்துடன் தனது தேவைகளை  அவர்களிடம்
முறையிடுவதோடு தமது துஆ கண்டிப்பாக அங்கிகரிக்கப்படும் என்றும் முழுமையாக நம்ப வேண்டும்.

இவ்விஷயத்தில் முடிந்தவரை நல்லெண்ணத்தை கொண்டே காரியமாற்ற
வேண்டும். ஏனெனில் இவர்கள் அல்லாஹ்வின் திறந்து வைக்கப்பட்டுள்ள வாயில்களாகும்.மேலும் இறைவனின் மகத்தான வழக்கமானது, அந்த
நல்லோரின் காரணமாக, அவர்களது கரத்தை கொண்டு
நாட்டங்களை நிறைவேற்றி வைக்கிறான். இனி யார் அந்த நல்லோரின் தர்பாருக்கு செல்ல முடியவில்லையோ, அவர்கள்  அவர்களின்  தர்பாருக்கு ஸலாமை எத்திவைக்க வேண்டும் .

அத்துடன் தமது நாட்டம் . நிறைவேறுவதற்காகவும், தங்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவும் , தமது குறைகள் மறைக்கப்படுவதற்காகவும் அவைகளை அவர்களிடம் மானசீகமாக முறையிடவும் வேண்டும்.
ஏனெனில் அவர்கள் ஸாதாத்துகளாக இருப்பதால் கேட்போரின் கேள்விகளையும், வஸீலாவையும், நாட்டம் வைப்போரின் நாட்டத்தையும், பாதுகாப்பு தேடுவோரின் வேண்டுதலையும் அவர்கள் ஒருபோதும் ஏற்காமல் இருப்பதில்லை ."
[நூல்: அல்முத்கல், பாகம் -2, பக்கம் -251.]




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...