Tuesday 6 September 2022

உஸ்தாத்- மாணவர்

🌹இஸ்லாம் கூறும் ஆசிரியர் - மாணவர் உறவு 🌹

மார்க்க கல்வி கற்கும் மாணவர் முதன்மையாக தனது நப்ஸைத்  தூய்மைப்படுத்துவதில் தொடங்க வேண்டும் மற்றும் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், ஏனென்றால் இல்ம்  என்பது கல்பின் வணக்கமாகும். அறிவைத் தேடுவதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். முற்கால முஸ்லிம்கள் எதையும் விட இல்மிற்கு முன்னுரிமை அளித்து வந்தனர். உதாரணமாக, இமாம் அஹ்மத் பின் ஹன்பல்  رضي الله عنه நாற்பது  வயது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

கல்வி கற்கும் மாணவரிடம் , ஆசிரியர் ஒரு நோயாளியிடம்  மருத்துவர் எவ்வாறு நடந்து கொள்வாரோ அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் . மாணவர் தனக்கு இல்ம் கற்பிக்கும்  ஆசிரியருக்கு சேவை செய்திட வேண்டும். இப்னு அப்துல்-பார் رَحِمَهُ ٱللَّٰهُ,  தனது 📖ஜாமி’ பயான் அல்-’இல்ம் வா ஃபத்லிஹ் நூலில் கூறுகின்றார்கள் , " ஸெய்யிதினா ஹழ்ரத் இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள், ஸெய்யிதினா ஜைத் இப்னு தாபித் رضي الله عنه அவர்களின்  வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்தவாறு ஓடினார்கள். ஸெய்யிதினா ஜைத் இப்னு தாபித் رضي الله عنه அவர்கள் -அன்னாரிடம், "நபி ( ﷺ) அவர்களின் உறவினரே, வேண்டாம்!" என்று மறுத்தார்கள். அப்போது ஹழ்ரத் ஸெய்யிதினா இப்னு அப்பாஸ் رضي الله عنه , “எங்களில் உள்ள கல்விமான்களை  இப்படித்தான் நடத்த வேண்டும் என்று எங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது” என்று கூறுவர்.

மார்க்க கல்வி கற்கும் மாணவர் பெருமிதம் கொள்வதை விட்டும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அது அறிவீனர்களின் குறைபாடு. அவர் அனைத்து விஷயங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும் மற்றும் தனது சொந்த கருத்தை விட தனது உஸ்தாதின் கருத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.📖 அல் ஜாமீ லி அஹ்லாக் அல் ராவி வ அதப் அஸ்ஸாம் நூலில், இமாம் கதீப் அல்-பக்தாதி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் , "பொதுமக்களுக்கு வாழ்த்து கூறுவது அறிஞரது உரிமையாகும். பொதுவாக மற்றும் குறிப்பாக வாழ்த்தப்பட வேண்டும். நீங்கள் மார்க்க அறிஞருக்கு முன்பாக உட்கார்ந்து,அதிகமான தேவையற்ற கேள்விகளைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் அவருடைய இரகசியங்களை வெளியிடாதீர்கள், அவர் முன்னிலையில் மக்களைப் பற்றி புறம் பேசாதீர்கள், அவருடைய குறைபாடுகளைக் கண்டறியாதீர்கள்." என்று கூறுகின்றார்கள்.

இல்ம் கற்கும் மாணவர், அறிவைத் தேடும் தொடக்கத்தில், மனக்குழப்பங்களைத் தவிர்க்க வேண்டி ,அறிஞர்களது வேறுபாடுகளில்  தனது மனதை ஆக்கிரமிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறார்.

ஆசிரியரைப் பொறுத்தவரை, அவர் பொறுமையாகவும் சகிப்புத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்காக அறிவைக் கற்பிப்பதில் அவர் தனது முயற்சிகளை அர்ப்பணிக்க வேண்டும், மக்களிடமிருந்து வெகுமதிகளையோ நன்றியையோ தேடக்கூடாது. ஆரம்பகால முஸ்லிம் அறிஞர்கள் மாணவர்களிடமிருந்து பரிசுகளை மறுத்தனர். ஆசிரியர் தனது மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் மற்றும் இந்த விஷயத்தில் சிறந்த நடத்தைகளைப் பின்பற்ற வேண்டும்.

மேலும், ஆசிரியர் தனது மாணவருக்குப் புரியும் மற்றும் புரிந்துகொள்ளக்கூடியவற்றைக் கற்பிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக, மார்க்க அறிஞர் தன் இல்முக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல நாயனான அல்லாஹ்   سبحانه و تعالى கூறுகிறான்:

اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
நீங்கள்  வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
அல் குர்ஆன் 2:44

📚 இமாம் இப்னு குதாமா அல் ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ , மின்ஹஜ் அல் காஸிதீன் ,பக்கம் 9-10
Related Posts Plugin for WordPress, Blogger...