Sunday 26 November 2017

வஸீலா - 1


வஸீலா மூன்று வகைப்படும் . உதாரணத்திற்காக அவ்வகைகளை அடியில் காண்க ,

" ஆண்டவா ! ஸெய்யிது அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنها அவர்கள் பொருட்டால் என் பிணியை நீயே நீக்குவாயாக "  என்று எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சி வேண்டுவது ஒரு வகை .

"யா முஹையத்தீன் ! முஹையத்தீன் ஆண்டகையவர்களே ! என் பிணி தீர நாயனிடம் பிரார்த்தனை புரிவீர்களாக ! " என்று விண்ணப்பித்துக் கொள்வது ஒரு வகை .

" யா முஹையத்தீன் ! யா கவ்துல் அஃலம் ! தாங்கள் அல்லாஹ்வின் பிரதிநிதியாகவும் ,அவனில் நின்றும் தத்துவத்தைப் பெற்றவர்களாகவும் இருக்கின்றீர்கள்   . ஆனபடியால் , தங்களையன்றி எனக்கு வேறு கதியில்லை .என் பிணியை தாங்களே நிவர்த்திக்க வேண்டும் " என்று நேரடியாக வேண்டுதல் செய்வது மற்றோரு வகை .

இவ்வாறாக மூன்று விதமாகக் கேட்பதும் ஆகும் . இந்த மூன்றும் ஒன்று தான் , என்பதாக இமாம் ,முஜ்தஜித் தகியுத்தீன் ஸுப்கி     ஷாபிய்யி رضي الله عنها அவர்கள் ஷிபாஉஸ்ஸிகாம் ,134வது பக்கத்தில் வரைத்துள்ளார்கள் . 


Shifa-us-siqam fi ziyarat khayr-il-anam
ஷிபாஉஸ்ஸிகாம்-இமாம் ஸுப்கி   
   ' அன்பியா ,அவ்லியாக்கள் ஆண்டவனது அஸ்மா , ஸிபாத்துகள் வெளியாகும் மழ்ஹர்கள் . ஆண்டவன் அளித்திருக்கக்கூடிய தத்துவத்தை வெளியாகித்தர வல்லவர்கள் என்ற எண்ணத்துடன் நேரடியாக அன்னவர்கள் பால் நமது தேவைகளை கேட்கலாம் . ஆண்டவனும் அன்னவர்களுக்கு அத்தகைய சக்தியை கொடுத்துள்ளான் . " என்பதாக மதராஸ் முப்தி ,அரசு காஜி , அல்ஹாஜ் முஹம்மது ஹபீபுல்லாஹ் சாஹிப் அவர்களும் , அல்ஹாஜ் தமீம் சாஹிப் ஆலிம் முப்தி அவர்களும் , காஜி உபைதுல்லாஹ் சாஹிப் அவர்களும் மற்றும் பல உலமாக்களும் ,முப்திகளும் பத்வா அளித்துள்ளனர் .

இங்கனமிருக்க ,
 " ஆண்டவனுக்கு பயப்படுவதையும் , அவனுக்கு வழிபடுவதையும்  பற்றிப் பிடித்துக் கொள்வீர் !
அல்லாஹ்வைத் தவிர்த்து யாரிடமும் பயமோ , ஆதரவோ கொள்ளாதீர் !    சர்வதேவைகளையும் அல்லாஹ்வின் பால் ஒப்படைத்து , அவனிடமே எல்லா தேவைகளையும் கேட்பீராக ! அல்லாஹ் அல்லாதவற்றின் பால் ஆதரவு வைக்காமல் அவனிடமே நம்பிக்கை கொள்வீராக " என்பதாய் ஸெய்யிதினா அப்துல் காதிர் ஜீலானி  رضي الله عنها அவர்கள் தங்களது மவுத்தின் பொது ஸெய்யிதினா அப்துல் வஹ்ஹாப் رضي الله عنها அவர்களுக்குச் செய்த வஸியத்தை எடுத்துக் காட்டி, அன்பியா ,அவ்லியாக்கள் பால் உதவி தேடுதல் கூடாது என்கின்றனர் .

இதற்கு 'இஸ்திஆனத் ஹகீகி' என்று பெயர் .    குர்ஆன் ,ஹதீது கொண்டு 'இஸ்திஆனத் மஜாஸீ ' ஆகுமான காரியமென்று ஹழ்ரத் கவ்துல்  அஃலம் رضي الله عنها அவர்கள் அவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள் . மக்கள் அவர்கள் பால் உதவி தேடியதையும் , தேடுவதையும் , மவுத்திற்குப் பிறகு தேடப் போவதையும் அவர்கள் தெரிந்தே இருக்கின்றார்கள் .ஆகையால் அவர்கள் இதை விலக்கவில்லை . எத்தகைய தேவைகளை மக்கள் அவர்கள் பால் தேடினார்கள் ,அவற்றை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றி கொடுத்தார்கள் எனும் விபரங்கள் அவர்களது சரித்திரங்களில் கூறப் பெற்றுருக்கின்றன .

அவர்கள் இரட்சிப்பதில் வலுப்பமானவர்கள் . ஆண்டவன் அவர்களுக்கு இரட்சித்து உதவி செய்யக் கூடிய தத்துவத்தை கொடுத்துள்ளான் .

ஷெய்குனா , குத்புல் அக்தாப் , கவ்துஸ் ஸமதானி , மஹபூப் ஸுப்ஹானி , முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி    رضي الله عنها அவர்கள் பின்வருமாறு கூறியிருப்பதையும் ஒப்பிட்டுச் சீர்தூக்கி பார்த்து உண்மையை உணருங்கள் !

                  (இஸ்மீ - க - இஸ்மில் அஃலம் )     

"(நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி வைப்பதில் ) எனது திருநாமம் வலுப்பமான ஆண்டவனது  (இஸ்முள் அஃலம்  ) தெய்வீக திருநாமம் போன்றுள்ளது "  என்பது அவர்களுடைய பொன்மொழி . இவ்விபரம் , ஆதரமான ,பிரபல்யமிக்க 'மனாகிபு' கிரந்தங்களில் காணக்கிடக்கின்றது .

ஹைதராபாத்தின் முற்கால முப்தி மவ்லானா மவ்லவி முஹம்மது ஸயீது கான் சாஹிப் அவர்களும் இது சம்பந்தமாக கொடுத்துள்ள பத்வாவில் இதுபற்றி விளக்கப்படுத்தியுள்ளார்கள் .

மேலும் இமாம் அப்துல்லாஹ் யாபியீ  ஏமனி   رضي الله عنها அவர்களது 'குலாஸத்துல் மபாகிர் ' எனும் கிதாபில் ஸெய்யிதினா ஸுல்தானுல் அவ்லியா ஷெய்கு முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி  رضي الله عنها அவர்கள் சொல்ல நான் கேட்டேனென்று ஷெய்கு உமருல் பஸ்ஸார்  رضي الله عنها அவர்களைத் தொட்டும் ரிவாயத்து அறிவிக்கப்பட்டுள்ளது . என்னவெனில் - 

"எவனொருவன் ,முஸீபத்தில் சங்கடத்தில் அகப்பட்டுக் கிடக்கும் பொழுது அவன் என்னைக் கொண்டு இரட்சிப்பு தேடுவானாகின் அவனை விட்டும் அந்த முஸீபத்தை ,சங்கடத்தை நீக்கப்படும் .

இன்னும் யாராவது ஒரு நாட்டத்தை (ஹாஜத்தை ) நாடி அல்லாஹுத்தஆலா அளவில் என்னைக் கொண்டு வஸீலா சிபாரிசு தேடுவானாகில் அந்த ஹாஜத்தை அவனுக்கு நிறைவேற்றிக் கொடுக்கப்படும் .


மேலும் எவரொருவர் இரண்டு ரக்அத்து , ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரத்துல் பாத்திஹாவிற்குப் பின்    ஸுரத்துல் இக்லாஸ் 11 விடுத்தும் ஓதி ஸலாம் கொடுத்த பின் நாயகம்   அவர்களை நினைவுகூர்ந்து ஸலாத்தும் ,ஸலாமும் சொல்லியதற்கப்பால் ,என்னுடைய நாமத்தை உச்சரித்த வண்ணம் ,தனது நாட்டத்தையும் நினைவு கொண்டவனாக ,ஈராக்கு தேசத்தளவில் 11 எட்டு எடுத்து வைத்தானாகில் அந்த ஹாஜத்தை நிறைவேற்றிக் கொடுக்கப்படும்" என்பதே .
Nuzhat-ul-Khatir
நுஸ்ஹத்துல்  காத்திருல்  பாத்திர்

இதற்கொப்ப ஹழ்ரத் ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி 
 رضي الله عنها அவர்கள் 'ஜுப்ததுல் ஆதார் ' என்ற நூலிலும் , இமாம் முல்லா காரீ மக்கீ رضي الله عنها அவர்கள்  'நுஸ்ஹத்துல்  காத்திருல்  பாத்திர்'     என்ற நூலிலும் எடுத்துரைத்துள்ளார்கள் .

இன்னமும் குத்புர் ரப்பானி கவ்துல் அஃலம்  رضي الله عنها அவர்கள் தங்களது மக்களை நோக்கி சொல்லியிருப்பதைப் பாருங்கள் :

அவர்கள் , தங்கள் மக்களை நோக்கி , " என்னை விட்டு செல்லுங்கள் . வெளிரங்கத்தில் நான் உங்களுடன் இருக்கின்றேன் . உள்ரங்கத்தில் மற்றோருவனுடன் இருக்கின்றேன் . எனக்கும் , உங்களுக்கும் இதர சிருஷ்டிகளுக்கும் இடையே வானத்திற்கும் ,பூமிக்கும் உள்ள வித்தியாசமிருக்கின்றது . என்னை இதரர்களை போன்று யூகிக்க வேண்டாம் .

நான் உங்கள் யுக்திக்கு அப்பாற்பட்டவன் . என்னிலையை நீங்கள் யாரும் அறிய மாட்டீர்கள் . நான் உங்களை விட உயர்ந்த உச்ச நிலையிலிருக்கின்றேன் " என்று கூறியுள்ளார்கள் .

மேலும் தங்களது குமாரர் ஸெய்யிது அப்துல் ஜப்பார் رضي الله عنها அவர்களைக் கூப்பிட்டு , "நீர் உறங்குகின்றீரா ? விழித்திருக்கின்றீ ரா ? என்னில் நீர் பினாவாகிவிடும் .விழிப்படைவீர் ." என்று உரைத்திருக்கின்றார்கள் .

மேலும் கவ்துல் அஃலம்  رضي الله عنها அவர்கள் ,  "ஆண்டவனால் எனக்கு அருளப்பெற்ற அகக் கண்ணைக் கொண்டு நான் இவ்வுலகை ஒரு கடுகைப் போல் காண்கின்றேன் " என்றும் கூறியுள்ளார்கள் .

அத்தகைய மஹபூபே ஸுப்ஹானி , மஹ்ஷுக்கே ரஹ்மானி கவ்துல் அஃலம்  رضي الله عنها     அவர்கள் உரைத்துள்ள பைத்துக்களைக் பாருங்கள் .

எவரொருவர் நம்மை உகந்து நமது இடத்திற்கு வருகிறாரோ அவர் நாயகத்தனம் பெற்ற நாதாக்களுடைய கோட்டைக்குள் புகுந்து நம்முடைய கார்மானத்திலாகி மிகுதியான சம்பத்தைப் பெற்றுக்கொள்வார் .

"என்னுடைய முரீதுக்கு எவ்விதமான பயங்கரமும் வந்தணுகாமல் , நான் அவனை அவனுடைய கருமங்களில் எவ்விதமான தீங்குகள் ,முஸீபத்துக்கள் வராமல் பார்த்துக் கொள்வேன் ."

"என்னுடைய முரீதே ! உனக்கு நல்மாராயம் உண்டாவதாக ! உன்னுடைய தேவைகள் அனைத்தையும் உமக்கு  நிறைவேற்றித் தருவதன் பேரில் உனக்குச் சோபனம் ! யாதொரு கருமத்தைப் பற்றியாவது நீ வியாகூலமடைந்து துக்கித்தவனாக இருப்பாயானால் , அவ்வேளையில் நான் எனது ஹிம்மத் என்னும் துணிச்சல் கொண்டு உனக்கு உதவி செய்து நான் உன்னை 
இரட்சிப்பேன் " 

"என்னுடைய முரீதே ! என்னைப் பற்றிப் பிடித்துக் கொள் ! என்னை விசுவாசித்தவனாக இருந்து கொள் ! அப்படியானால் நான் உன்னை இவ்வுலகிலும் மறு உலகிலும் காப்பாற்றுவேன் .

"என்னுடைய முரீது அஞ்சி நடுங்கும் வேளையில் அவனது அச்சத்தை நீக்கி வைக்கும் பாதுகாவலனாக நான் இருக்கின்றேன் . எல்லா விதமான பித்னாச்  சோதனைகளிலிருந்தும் , பொல்லாங்குகளிலிருந்தும் நான் அவனைப் பேணி பாதுகாத்துக் கொள்வேன் "  

"என்னுடைய முரீது கிழக்கிலோ ,மேற்கிலோ உள்ள எந்த  ஊரில் இருப்பினும் அவனது அழைப்பிற்கு நான் விரைந்து சென்று உடனே அவனை இரட்சிப்பேன் .

"எத்தகைய கஷ்டத்திலும் ,பயத்திலும் நீ என்னிடம் உதவி தேடு . எல்லாக் காரியங்களிலும் நான் உனக்கு உதவி புரிந்து இரட்சிக்க எனது ஹிம்மத்துடன் ஆஜராவேன் "


 "யாருக்காவது யாதொரு வருத்தம் ,வியாக்கூலம் உண்டாயிருக்கமாயின் அவர்களை விட்டும் அந்த துன்பம் துயர்  வியாக்கூலங்களை நான் நிவர்த்தி செய்து கொடுத்து அவர்களுக்கு இரட்சிப்புக் கொடுக்கும் உதவியாகவும் ,  கிருபையாகவும் அகி இருக்கின்றேன் . ஆதலால் ,எனது செங்கோலைக் குறித்து கட்டியம் கூறுதலெனும் சங்கநாதம் கிழக்கு ,மேற்கு எப்பகுதிகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது  ." 

"என்னுடைய முரீது உதயகிரியிலோ அல்லது அஸ்திகிரியிலோ அல்லது ஆழிய சமுத்திரத்தின் அடிவாரத்திலிறங்கி நின்றோ , ஆகாயத்தின் உச்சியில் நின்றோ எந்நிலையில் என்னிடம் உதவி  அபயம்   தேடி அழைத்தாலும் உடனே நான் அவனைக் காத்து இரட்சிப்பேன் . என்னை எதிர்த்து வழக்காடும் அத்துணை பேர்களையும் சம்கரித்து தீர்ப்பு செய்யும் கூரிய வாளாக நான் இருக்கிறேன்  " 



"இப்போது சொன்ன சொற்களெல்லாம் பெருமையை நாடி நான் சொல்லவில்லை . ஆண்டவனிடமிருந்து அவ்வாறு சொல்லும்படி வந்த உத்தரவின் பிரகாரம் தான் நான் சொன்னேன் . ஏனெனில் ஜனங்கள் எனது ஹகீகத்தை அறிவதற்காகவே ".

"அவ்வாறான வார்த்தைகள் எதையும் ,இறைச் சமூகத்திலிருந்து நீர் சொல்லும் -அஞ்ச வேண்டாம் - விலாயத்தினுடைய உயர்ந்த தனிப் பெரும் அந்தஸ்த்தில் நீர் நம்முடைய வலியாக இருக்கின்றீர் என்ற உத்தரவு வந்தேயல்லாது நான் சொல்லவில்லை " 


ஹழ்ரத் கவ்துல் அஃலம்     رضي الله عنها அவர்கள்  இவ்வாறு வாக்குறுதி செய்திருக்கின்றார்கள் . சொன்னதற் கொப்ப செயலிலும் செய்து காட்டியுள்ளார்கள் . செய்து கொண்டே இருக்கின்றார்கள் . மேன்மை மிக்க அவர்களது இந்தச் சத்திய வாக்குகள் 'புயூளாத்துர் ரப்பானியா ' போன்ற நூற்களிலும் காணப்படுகின்றன  .    

தனிப் பெரும் தகுதி படைத்த அண்ணல் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி   رضي الله عنها அவர்களை வியந்து புகழ்ந்து பாராட்டி புகழ்மாலையாக ,

" அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள் 
                     அடக்கி விளையாடவல்லீர் !
அகிலமோ ரேழினையும் ஆடுங்கறங்குபோல் 
                       ஆட்டி விளையாட வல்லீர் !
மண்டலத் தண்டரை அழைத்தருகிருத்தியே 
                        வைத்து விளையாட வல்லீர் !
மண்ணகமும் விண்ணகமு மணுவைத்     துளைத்ததின் 
                        மாட்டி விளையாட வல்லீர் !
கண்டித்த கடுகில் எழுகடலைப் புகட்டிக் 
                        கலக்கி விளையாட வல்லீர் !
கருத்தரிய சித்தெல்லாம் வல்லநீர் அடிமை என் 
                        கண்முன் வருசித்தில்லையோ !
நண்டளந்திடு நாழியாவனோ தேவரீர் 
                       நல்லடிக்காளாகியும் !
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு 
                       நாதன் முஹையத்தீனே ! "

என்றும் ,

" சொல்லான் முழக்கமிட்டோலமிடு வேதமுஞ் 
                    சொன்னதுடனின்ன மின்னஞ் 
சுருதி முதலாகம புராணகலை யோதிய 
                   சுலோகங்லென் சொல்லுகேன் !
பல்லாயிரம் கொடியண்ட பகிரண்டமுன் 
                    பாதபங்கயமல்லவோ !
பரிபூரானந்தமே யுனது முடியெனப் 
                     பகர்வதும் பொய்யாகுமோ !
வல்லாநெனும்    பெயர் உனக்குதள தல்லாது 
                   மற்றவர் தமக்குமுளதோ !
வானவர் தினந்தினம் வாதுன்பதம் பணியும் 
                   மகிமை   சொல வாயுமுண்டோ !
நல்லோர் தமக்கலாதெல்லார்     தமக்குமனை 
                   நலிலுதற்  கெளிதாகுமோ !
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு 

                       நாதன் முஹையத்தீனே ! "

என்றும்  மெய்ஞான  மேதை  ,அல் ஆரிபுல் காமில் , குணங்குடி மஸ்தான் ஹழ்ரத் என்னும் ஸெய்யிது அப்துல் காதிர் ஆலிம்  رضي الله عنها அவர்கள் உரைத்துள்ளார்கள் .

ஆகவே ,எவரெவர் திரிகரண சுத்தியுடன் , அபாய வேளையில் ,அபயந் தேடி  

"எந்த வேளையும் யா முஹையத்தீனென்று இயம்பினோர்க்குகந்து அந்தந்த வேளை வந்துதவி செய்வேனென்றருள் செய்தீர் !   
இந்த நல்வேளை இதுவேளை வேளையிது சமய்  வந்தெனக் கருள் 
புரிவீர் முஹையத்தீனாண்டகையே ! " 

என்று அழைத்துக் கூப்பிட்டு உதவி தேடுகின்றனரோ அன்னவர்கள் கைகொடுத்துக் காப்பாற்றப்படுவார்கள் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை .

எல்லா குத்புமார்களுக்கும் சக்கரவர்த்தியான ஹழ்ரத் குத்புல் அக்தாப் ,கவ்துல் அஃலம் முஹையத்தீன்    رضي الله عنها அவர்கள் நிலை பற்றி இதுகாறும் பேசி வந்தோம் . அவர்களது தொண்டர்களான ஏனைய குத்புமார்களும் கூட தங்களது அன்பர்களுக்கு உதவிபுரியும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள் .  

             




      

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...