Tuesday 22 August 2017

மரணித்திற்கப்பாலும் ஹயாத் உண்டா ? - 2


"மைய்யித்தானது தன்னைக் குளிப்பாட்டுபவர்களையும் ,சுமந்து செல்பவர்களையும் .கபுருக்கு முடுகி நிற்பவர்களையும் அறிவார்கள் ,பேச்சுகளையும் கேட்பார்கள் " என்று பதாவா குப்ராவில் தலீல் அத்தாட்சிகளுடன் நகல் செய்யப்படுகிறது .மேலும் இவ்வாறே ஷரஹுஸ் ஸூதூரிலும் ,ஷரஹு பர்ஜகிலும் விரிவாக நகல் செய்யப்பட்டுள்ளது .

Saadat Ul Darain

ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி رضي الله عنه‎  அவர்கள்  வபாத்தான பிறகு அவர்களே தங்களது வீட்டிற்கு வந்தார்கள் . தங்களது வெள்ளாட்டியைக் கண்டு அவளது சுக செய்திகளையும் ,நிலைமைகளையும் விசாரித்தார்கள் .எல்லா விஷயங்ககளையும் அவள் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினாள் . அவர்கள் அவளிடமிருந்து விஷ்யங்களைக் கேட்டுத் தெரிந்து சென்றார்கள் என்பதாக புஸுஸுல் ஹிகம் உடைய ஷரஹில் இமாம் ஷைகு ஜுந்தி   رضي الله عنه‎  அவர்கள் கூறுவதாக ஸ ஆதத்துத் தாரைன் 402வது  பக்கத்தில் வரையப்பட்டுள்ளது .   

"அவ்லியாக்களுக்கு ஆண்டவனால் அருளப்பட்டிருக்கும் கறாமத்து அதிசயத்தின் பொருட்டால் ரூஹானியத்தான சக்தியைக் கொண்டு ஹயாத்திலும் மவுத்திற்கு பிறகும் அவர்கள் வெளிப்பட்டு உலகில் நடமாடும் சக்தியுண்டு " என்பதாகக் இமாம் ஜலாலுதீன் ஸூயூத்தி رضي الله عنه‎  அவர்கள் 'அல் கபருத்தால்லு அலா வுஜூதில் குதப்பி வல் அப்தால்' என்ற நூலிலும் ,இமாம் ஸெய்யிது ஷஹாபுத்தீன் அஹ்மது ஹுசைனி ஹமவீ   ஹனபி رضي الله عنه‎  அவர்கள் 'நபஹாத்துல் குர்பிவல் இத்திஸால் ' என்ற நூலிலும் கூறுகின்றார்கள் .

"அவ்லியாக்களில் பெரும்பாலோர் வபாத்துக்குப் பிறகும் கபுருகளிலிருந்து புறப்பட்டு வெளியே போகவும் செய்கிறார்கள் .திரும்பவும் கபுருக்குள் மீளவும் செய்கிறார்கள். போகவர அவர்களுக்கு எத்தகைய தடையுமில்லை " என்பதாக அல் குத்பு இமாம் ஷஃறானி  رضي الله عنه‎  அவர்கள்   'லத்தாயிபுல் மினன்'  பாகம் 1,பக்கம் 144ல் வரைந்துள்ளார்கள் .   


"நபி கரீம் ﷺ அவர்களைத் தங்களது மவுத்தாகிப் போன  ஸஹாபாக்களின் அர்வாஹூஹள்   சகிதம் எல்லா உலகங்களையும் சுயேச்சையாகச் சுற்றி வருவதை அவ்லியாக்கள் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள் " என்பதாக ஹஜ்ஜதுல் இஸ்லாம்  இமாம்   கஸ்ஸாலி رضي الله عنه‎ அவர்கள் ஆதாரத்துடன் கூறுவதை , தப்சீர் ரூஹூல் பயான் பாகம் 10,பக்கம் 99ல் காணலாம் .


இதற்கு ஆதாரமாக வபாத்திற்குப் பிறகு நிகழ்ந்த சில சம்பவங்களைக் காண்க .


இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி      رضي الله عنه‎  அவர்கள் ஸியாரத்துச் செய்வதற்காக ஸெய்யித் உமர் இப்னு பாரிலு 
رضي الله عنه‎  அவர்களுடைய கப்ரு ஷரீபுக்கு சென்றபோது அங்கு அவர்களைக் காணாதபடியால் திரும்பிவிட்டார்கள் .பிறகு உமர் இப்னு رضي الله عنه‎  அவர்கள் இமாம் ஷஃரானி      رضي الله عنه‎  அவர்கள் இடம் சென்று தேவையை முன்னிட்டு வெளியே சென்றிருந்ததாகத் தெரிவித்து மன்னிப்பு கோரியதாக இமாம் ஷஃரானி     رضي الله عنه‎  அவர்களே தங்களுடைய 'லதாயிபுல் மினான் ' 1வது பாகம் 144வது  பக்கத்தில் வரைந்துள்ளார்கள் . 

ஸெய்யிது ஷைகு அப்பாஸ் முர்ஸீ  رضي الله عنه‎   அவர்களை சனிக்கிழமை சூரியோதயத்திற்கு முன்னும் ,ஸெய்யிது இப்ராஹீமுல் அஃரஜ் رضي الله عنه‎  அவர்களை வெள்ளிக்கிழமை மக்ரிபுக்குப் பின்னும் ,ஸெய்யிது யக்கூத்துர் அர்ஷீ رضي الله عنه‎  அவர்களை செவ்வாய்கிழமை லுஹருக்குப் பின்னும் அவர்களுடைய கபூருக்குச் சென்று ஸியாரத்துச் செய்யும் படியும் ,அவர்களெல்லோரும் குறிப்பிட்ட அந்த நேரங்களில் தான் கபூரில் ஆஜாராயிருப்பார்களென்றும் , இவ்வுண்மையை அகக்கண்ணை உடையவர்களைத் தவிர மற்ற எவரும் அறியமாட்டார்களாகையால் , கபுருகளில் அவர்கள் இருக்கவே செய்கின்றார்கள்  என்ற எண்ணத்துடன் கஷ்பில்லாதவர்கள் செய்ய வேண்டுமென்றும் ஸெய்யிது அலி பதவி    رضي الله عنه‎   அவர்கள் உபதேசித்திருப்பதாக மேற்சொன்ன லதாயிபுல் மினான் அதே    பக்கத்தில் வரையப்பட்டுள்ளது . 


ஆகவே ,இறப்பு என்பது அழிவுக்குரியதன்று . சில படித்தரங்களைக் கொண்ட ஜடத்துவ மாறுதலாகும் .ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு முன்னேறிச் செல்வதாகும் .ஏனெனில் ஆத்மா அழிவில்லாதது ,இறப்பும் பிறப்புமற்ற நிலையிலுள்ளது .


ஹுஜ்ஜதுல்  இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه‎   அவர்கள் கீமியாயே ஸஆதத்  பீடிகையில் குறிப்பிடும்  'மனுஷ்னன் அனாதியல்லனாயினும் முடிவற்ற நித்தியன் ' எனும் பொன் மொழியில் இருந்து ,மரணத்தோடு மனிதனின் வாழ்க்கை முடிவடைந்து விடவில்லை என்ற உண்மை வெளியாகின்றது . நிர்யாணத்தினின்று ஒரு புதிய வாழ்க்கை உதயமாகி அது என்றும் அழியா நித்தியமாய் நின்று நிலவத் தொடங்குகின்றது . ஜடவுலகத்தைப்  பற்றி     நிற்கும் பூததேகத்தின் சுகபோக இன்பங்களின் வாசல் அடைபட ,சகல நுகர்ச்சிகளையும் அந்தரங்கத்திலிருந்து அனுபவித்து வந்த அந்த மனுஷ்யன் என்ற சுயம்பொருள் சூட்சமமாய் கிரியை புரிய சக்தி பெறுகின்றது . பிணி , மூப்பு ,தளர்ச்சி ,இயலாமை முதலிய தங்கட .சங்கடமின்றி மறதியற்ற முழுமனிதப் பண்பும் அவனில் அமைந்து காணப்படுகின்றது .


இவ்வுலகில் சஞ்சரித்து வந்தது போலவே எல்லாவிதமான புலன்களும் வதியத்தக்க யோக்கியதையுடையவனாய் ஆகும் போது தேகமும் அவற்றைத்  தொடர்ந்தே நிற்கும் . இம்மையில் பூத குணத்தின் மிகைப்பால் ரூஹு உடலுக்குள் மறைந்து காணப்படுவது போல ,மறுமையில் ரூஹானியத்தின் மிகைப்பால் தேகம் ரூஹுக்குள் மறைந்து காணப்படும் .ஹிஸாபு என்ற கேள்விகணக்கிற்கும் ,பாவ புண்ணித்திற்கேற்ற பலா பழங்களுக்கும் இத்தேகமே பொறுப்பாக விளங்கும் .


"அல்லாஹ்வின் சிருஷ்டிகளுள் எனது ஜோதியே முதன்மையானது " என்று நபிகள் நாயகம் அவர்கள் அருளியுள்ளார்கள் . 

Musannaf Abdur Razaq


Musannaf Abdur Razaq, al-Juz al-Mafqud min al-Juz al-Awwal min al-Musannaf Abdur Razaq, Page No. 99, Hadith Number 18

[நூற்கள்  - முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் ,பக்கம் 99,ஹதீத் எண்  18,

மவாஹிபுல் லதுன்னியா, பாகம் 1,பக்கம் 71,
ஷரஹ்  மவாஹிபுல் லதுன்னியா ,பாகம் 1,பக்கம் 89-91 ,
கஷ்ப் அல் கபா ,பாகம் 1, பக்கம் 311,ஹதீத் எண் 827 ]

எனவே , ஒளியாகிய நூர் என்னும் ஒரே அஸ்திவாரத்திலான உயிர் -உடல் என்ற இவ்விரு வஸ்துக்களும் ஒன்றோடொன்று ஐக்கியப்பட்டு மாறுவதும் ,வெளிப்படுவதும் ஆன்ம சக்திமிக்க பெரியாரிடத்து அதிசயிக்கத்தக்க கருமமன்று .


அவ்லியாக்களிடத்தில் ஸ்தூலத்திற்கும் ,சூட்சமத்திற்கும் மத்தியில் பிரமாதமான வித்தியாசம்  ஒன்றும்  இல்லை . சூட்சமத்திற்குள் ஸ்தூலம் அடங்குவதும் அன்னாரிடத்தில் பெரிய கருமமன்று .


அல்லாஹ்வின் மெய்யடியாரான அவ்லியாக்கள் , தாங்கள் சிருஷ்டிகளின் பார்வையிலிருந்து மறைய நாடும் பொழுது , மரணம் என்னும் போர்வைக்குள் புகுந்து கொள்வதும் , அடக்கம் செய்யப்பட்ட பின் ஸ்தூலத்தை சூட்சமத்திற்குள்ளடக்கி கபூரிலிருந்து வெளியே புறப்படுவதும் அன்னாருக்கு எளிதான கருமமாகும் . ஆண்டவன் அவர்களுக்கு அத்தகைய தத்துவத்தை கொடுத்துள்ளான் . இத்தியாதி காரணங்களைக் கொண்டு மரணத்திற்குப் பின்னும் அவ்லியாக்கள் ஜீவனுள்ளவர்கள் .அழியாத தேகத்தை உடையவர்கள் ,கிரியைகள் புரியும் சக்தி உடையவர்கள் எனத் தெரிய வருகின்றது .


பின்வரும் வரலாற்றில் பதிவுபெற்ற நிகழ்வுகளே அதற்கு சான்றாகும் .


ஹழ்ரத் கிழுறு عَلَيْهِ السَّلَام ,இமாமுல் அஃலம்  அபூஹனீஃபா  رضي الله عنه‎   அவர்களது வஃளு மஜ்லிஸுக்கு தினந்தோறும் காலை வேளையில் ஆஜராகி இல்முகளை கற்று வந்தார்கள் . இமாம் அவர்கள் வபாத்தான பிறகு அந்த மஜ்லிஸ் நடைபெறவில்லை .    ஹழ்ரத் கிழுறு عَلَيْهِ السَّلَام அவர்கள் ஆண்டவனது உத்தரவு பெற்று ,ஹயாத்தில் நடந்தது போலவே மவுத்திற்குப் பின்பும் மாமுல் அஃலம்  அபூஹனீஃபா  رضي الله عنه‎  அவர்களது கபூர் ஷரீப்பிற்கு ஒவ்வொரு நாள் காலையிலும் சென்று ஷரிய்யத்துடைய இல்முகளை கேட்டு வந்ததாக இமாம் இப்னு ஜவ்ஸீ  رضي الله عنه‎   அவர்களைக் கொண்டு 'பதாயிஉ ' என்னும் பிக்ஹ் நூலில் வருவதாக     ஷைகு ஹஸனுல் அதவி  மிஸ் ரீ   رضي الله عنه‎  அவர்கள் 'மஷாரிகுல் அன்வர் ' பக்கம் 69ல் வரைந்துள்ளார்கள் . 


நான்கு மத்ஹபுகளுடைய இமாம்களுள் ஒருவரான இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رضي الله عنه‎  அவர்களது ஜியாரத்திற்கு சென்ற குத்புர் ரப்பானி ,கவ்துஸ் ஸமதானி  முஹ்யித்தீன் ஸெய்யிது அப்துல் காதிர் ஜீலானி  رضي الله عنه‎   அவர்கள் அன்னாருடைய கப்ரு ஷரீபிற்கு எதிரே அதபுடன் நின்று ," அஸ்ஸலாமு அலைக்கும் யா இமாமல் கிராம் " (சங்கைக்குரிய இமாம் அவர்களே ) என்று அழைத்து ஸலாம் சொன்னார்கள் . உடனே ,கப்ரு ஷரீப் இரண்டாகப் பிளந்து ,இமாம் அவர்கள் ஜோதிப் பிரகாசத்தோடு வெளியே பிரசன்னமாகி கவ்துல் அஃலம் رضي الله عنه‎  அவர்களை கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்தார்கள் . நூரானியத்தான பரிவட்டத்தை போர்த்தி ,"ஸெய்யிது அப்துல் காதிரே ! ஷரீயத்துடைய இல்முகளும் ,ஹகீகத்துடைய இல்முகளும் தங்கள் பால் ஹாஜாத்தாகின்றன " என்று பகர்ந்து விடைபெற்று மறைந்தார்கள் . இச்சம்பவம் 'பஹ்ஜத்துல் அஸ்றார் ' கிரந்தத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாய்     'தப்ரீஜூல் காத்திர்' 40வது பக்கத்திலும் ,  'பஸ்லுல் கிதாப்' 129வது பக்கத்திலும் , ஷைகு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி  رضي الله عنه‎  அவர்களின்  'ஜுப்ததுல்    அஸ்றார் '  நூலிலும் காணப்படுகின்றது.    


குத்புஸ் ஸமான் ஷைகு அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி    رضي الله عنه‎  அவர்கள் கூறுகின்றார்கள் ,

"நான் எனது உஸ்தாது ஷைகு ஸெய்யிது முஹம்மது ஷனாவி رضي الله عنه‎   அவர்களுடன் , அல் குத்புஷ்ஷஹீர்   ஸெய்யிது அஹ்மது பதவி رضي الله عنه‎  அவர்களது தர்காவிற்கு ஜியாரத்திற்காகச் சென்றேன் . அச்சமயம் எனது உஸ்தாதவர்கள் கப்ரு ஷரீபை முன்னோக்கி  'நாயகமே ! இன்ன காரியத்தை முன்னோக்கி மிஸ்ருக்கு போகப் பிரயாணமாயிருக்கிறேன் . விடை கொடுத்து அனுப்புங்கள் ' என்று விண்ணப்பித்து நின்றார்கள் .


'அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவராக போய் வாருங்கள் ' என்ற நல்வாக்கு கப்ருக்குள்ளிருந்து வெளிவந்த சப்தத்தை எனது வெளிரங்கமான இரு காதுகளைக் கொண்டு நன்கு  கேட்டேன் ' என்பதாக 


இவ்வரலாற்றை இமாம் ஷஃரானி    رضي الله عنه‎  அவர்கள் 'லதாயிபுல் மினான் ' பாகம் 1,பக்கம் 180ல் குறிப்பிட்டுள்ளார்கள் 


அமீருல் முஃமினீன் ஸெய்யிதுனா அபூபக்கர் ஸித்தீக்  رضي الله عنه‎  அவர்கள் வபாத்தாகும் போது  , ' என்னுடைய ஜனாஸாவை கண்மணி நாயகம் ﷺ அவர்களுடைய முபாரக்கான அறையின் முன்னால் வையுங்கள் . கதவு திறக்கப்பட்டு அபூபக்கரை உள்ளே கொண்டு வாருங்கள் என்று உத்தரவு வந்தால் மட்டில் அவ்வறையிலியே அடக்கம் செய்யுங்கள் . இல்லையேல் பொதுக் கபரஸ்தானில் அடக்கம் செய்யுங்கள் ' என்று வஸிய்யத்துச் செய்தார்கள் . அவ்வாறே செய்யப்பட்டது .பூட்டப்பட்ட அறைவாயிலின் முன்பு ஜனாஸாவை வைக்கப்பட்ட பொழுது ,வாயில் கதவு தானாகவே திறந்து கொண்டது .


'தோழரை தோழரிடம் அனுப்பி வையுங்கள் ' என்ற உத்தரவு புனிதர் நாயகம்   ﷺ அவர்களுடைய சங்கை  மிகு ரவ்லா ஷரீபிலிருந்து வெளிவந்தது . அவ்விதமே அங்கு அடக்கப்பட்டார்கள் . இவ்வரலாற்றை இமாம் பக்ருத்தீன் ராஜி  رضي الله عنه‎  அவர்கள்  'தப்சீர் கபீர்' ,5வது பாகம் ,685ல் பக்கத்தில் கூறுவதாய்  'தப்ரீ ஹுல்  அத்கியா பீ அஹ்வாலில் அன்பியா ' ,பாகம் 2,பக்கம் 376ல் வரையப்பட்டுள்ளது .   


இத்தகைய நிகழ்ச்சிகள் , ஆதாரங்கள் இன்னும் எவ்வளவோ காண்பிக்கலாம் . உலகத்தார் யாவரும் ஏற்றிருக்கும் இமாம்கள் சம்பந்தப்பட்டவற்றையும் , அவை பற்றிய அங்கீகரிக்கப்பட்ட 

(முஃத்தபரான )   ஆதாரப்பூர்வமான கிரந்தங்களையே  ஆதாரங்களாக காட்டியுள்ளோம் . அன்பியாக்கள் ,அவ்லியாக்கள்  ஆகியோர் மவுத்திற்குப் பின்பும் ஹயாத்துள்ளவர்கள் என்பதற்கு மேற்கூறிய உதாரணங்களோடு இன்னும் இரண்டு தருகின்றோம் .

உதயகிரி முதல் அஸ்தகிரி வரை பிரபல்யம் அடைந்து , உலகம் ஒப்புக் கொண்டு ஓதிவரும் 'தலாயிலுள் கைறாத் ' இயற்றிய அல்லாமத்துல் பகீஹ், ஆரிபுல் காமில்  முஹம்மது இப்னு சுலைமானுல் ஜூஸுலிஷ் ஷாதுலி  رضي الله عنه‎   அவர்களது எண்ணிக்கையற்ற கராமத்துகளில் நின்றும் ஒன்று  'ஜாமியுல் கறாமத் ' 1வது பாகம் ,165வது பக்கத்தில் காணப்படுகின்றது .அடியில் அதைக் குறிப்பிடுகின்றோம் .



Shaykh Muhammad ibn Sulayman al-Jazuli


Shaykh Muhammad ibn Sulayman al-Jazuli

குத்புஷ் ஷஹீர் ,ஷைகு  முஹம்மது இப்னு சுலைமானுல் ஜூஸுலிஷ் ஷாதுலி  رضي الله عنه‎   அவர்கள் ஹிஜ்ரி 870வது வருஷத்தில் வபாத்தாகி , சூயஸ்பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள் . 77 வருடங்களுக்குப் பிறகு ஹிஜ்ரி 947வது  வருடம் அவர்களது கபூரை தோண்டப்பட்டது . அவ்வமயம் அவர்களது திரேகம் அடக்கம் செய்யப்பட்ட பொழுது  எவ்விதமிருந்ததோ அவ்விதமே உறுப்பில் எத்தகைய சேதமும் ,மாறுபாடும் இன்றி கபன் துணியில் கூட மண் ஒட்டாமலிருந்தது . அந்தத் திரேகம் கஸ்தூரி வாடையுடன் கமழ்ந்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற எண்ணற்ற மக்கள் பேராச்சியாரிப்பட்டு மயங்கி நின்றனர் . ஆண்டவனுடைய பாதையில் ஷஹீதானவர்கள் இறந்தவர்கள் அல்லர் . அவர்கள் ஜீவனுள்ளவர்கள் ,அவர்களுடைய உடலை மண் தின்னாது ,புழுபூச்சி ,மிருகங்கள் எதுவுமே தீண்டாது என்று அல்லாஹ்வும் அவனது ரஸூலும் கூறிய வாக்குகளை மெய்ப்பிக்கும் அத்தாட்சிகளாகவே அவர்கள் காணப்பட்டார்கள் .


மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் பொழுது அக்கூட்டத்திற்கு சிலர் சோதிப்பதற்கென்றே , வசீகரத்துடன் ஜோதிப் பிரகாசமாக இலங்கிக் கொண்டிருந்த அந்த வலியுல்லாஹ் அவர்களுடைய திருமுகத்தில் விரலை வைத்து அழுத்திப் பார்த்தனர் .  விரல் பட்ட இடத்தை சூழ்ந்து செந்நிறமாக இரத்தத்தின் அறிகுறி காணப்பட்டது 

. விரலை எடுத்ததும் அந்த உதிரக் கட்டு உடலில் பரவி மறைந்தது .

பிறகு அவர்களது பரிசுத்த திருமேனி ஆப்பிரிக்காவிலுள்ள மொராக்கோவுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது . அவர்களது கபூர் ஷரீபில் இன்றுவரை ஸலவாத்தின் பரக்கத்தை கொண்டு கஸ்தூரி வாடை கமழ்ந்து கொண்டிருக்கிறது . நாள்தோறும் ஆயிரக்கணக்காணோர் ஜியாரத்திற்காகச் சென்று  ,தலாயிலுள் கைராத் ஓதி நற்பேறுகளை பெற்று வருகின்றனர் . 


நபி பெருமானார் அவர்களது  ஸஹாபாத் தோழர்களான ஹழ்ரத் ஹுதைபதுல் யமனீ رضي الله عنه‎   ,ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜாபிருள் அன்சாரி  رضي الله عنه ஆகிய இருவரும் ஷஹீதாகி இராக்கில் பகுதாது நகருக்குச் சமீபமாக ஆற்றோரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள் . பிற்காலத்தில் வெள்ளப்பெருக்கால் இரு கப்ருகளுக்கும் சேதம்  ஏற்பட்டது . அவை ஆற்றில் மூழ்கிப் போய்விடுமோ என்ற பீதியும் ஏற்பட்டது . அதுசமயம் இராக்கில் ஆட்சிபுரிந்த அமீர் பைஸல் (மக்கா ஷரீஃப் ஹுஸைனுடைய மகன் ) உலமாக்களிடம் பத்வா வாங்கி அவ்விரு கப்ருகளையும் தோண்டி எடுத்து ,அவற்றை வேறு இடத்தில் அடக்கம் பண்ண ஏற்பாடு செய்தார் . இவ்விஷயம் விளம்பரபடுத்தப்பட்டது . உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் குறிப்பிட்ட தேதியில் அங்கு ஆஜராயினர் . அவ்விரு கப்ருகளும் 1300 ஆண்டுகளுக்கு தோண்டப்பட்டு அவ்விரு சடலங்களும் வெளியே எடுக்கப்பட்டு உயர்ந்த மேஜை மீது வைக்கப்பட்டன . திரேகத்தில் எவ்வித பேதமும் ,மாறுபாடும் காணப்படவில்லை . வியர்வை சொட்ட அவ்விரு முகங்களும் ஒளிப்பிரகாசத்துடன் இலக்கின . 


அனைவரும் அக்கட்சியைக் கண்டு பேராச்சரியத்தில் மூழ்கிப் போயினர் .  காரீ ஒருவர் 


'وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏  '
அன்றி, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரி களால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால் (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.  [ அல் குர்ஆன்  - 2:154 ]


என்ற குர்ஆனின் வேத வாக்கை ஓத ஆரம்பித்தார் .

அதற்கு அத்தாட்சியாக கண்முன் பிரத்தியட்சமாக அவ்விரு நாதாக்களின் பரிசுத்த திருமேனிகள் இருக்கும் காட்சியை நோக்கும் போது இந்த ஆயத் அவ்வமயந்தான் அருளப்பட்டது போல காணப்பட்டதாம் .


பிறகு அங்கு கூடியிருந்த ஜனசமுத்திரம், அலைகள்போல் அடுத்து நின்று தொழுது பகுதாதுக்கு 20 மைல் தூரத்தில் பாழடைந்து இருபிளவாகப் பிளந்து கிடக்கும் கிஸ்ரா கோட்டைக்குச் சமீபமாக , சஹாபி ஸல்மான் பார்ஸீ رضي الله عنه‎     அவர்களது கபூர் ஷரீபுக்கு அடுத்தன்மையாக மற்றோரு கட்டிடத்தினுள் இரு ஸஹாபிகளும் நல்லடக்கம் செய்யப்பட்டனர் . இந்நிகழ்ச்சி ஆங்கில வருடம் 1932ஆம் ஆண்டு நடைபெற்றது .பத்திரிகைகள் பலவற்றிலும் இச்சேதி வெளியிடப்பட்டது . மதராஸில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கை ஸைபுல் இஸ்லாமிலும், வட நாட்டின் உருது பத்திரிக்கைகளிலும் இவ்விபரம் வெளிவந்துள்ளது .






                                  பத்திரிகையில் வெளிவந்த செய்தி  !




6-11-1964 , நூருல் இஸ்லாம் தமிழ் வாரப் பத்திரிக்கையில் 
"வாடாமலர் " என்ற பகுதியில்  "இஸ்லாத்தின் அதிசய நிகழ்ச்சி " என்னும் தலைப்பில் வந்துள்ளதையும் நோட்டமிட்டு பாருங்கள் .

" இதர தேசங்களின் இராஜாங்க பிரதிநிதிகளும் இராக் அரசாங்கத்தின் சர்வ அதிகாரிகளும் திரண்டிருக்க ஷாஹ் பைஸல் அரசருக்கெதிரே முதன் முதலாக ஹழ்ரத் ஹுதைபா رضي الله عنه‎   அவர்களின் பரிசுத்த பிரேதம்  க்ரேன் மூலமாக அதிஜாக்கிரதையாக  பூமியிலிருந்து அப்படியே தூக்கப்பட்டது . அந்த ஜனாஸா ஸ்டெரெச்சர் மீது அழகாய் அமைந்துஹ் விட்டது . பின்னர் ,க்ரேனிலிருந்து ஸ்டெரெச்சரை தனியாக பிரித்து ,அதை மாட்சிமை தாங்கிய ஷாஹ் பைஸல் ,முப்தியே அஃலம் இராக் ,துருக்கி ஜனநாயகப் பொது அமைச்சர்,மிஸ்ரு இளவரசராயிருந்த பாரூக் முதலானோர் தோல் மீது தூக்கிச் சென்று அழகிய கண்ணாடி பெட்டகத்திற்குள் வைத்தனர் .     இதற்குப் பின் ஹழ்ரத் ஜாபிர் பின் அப்துல்லா  رضي الله عنه‎  அவர்களின் பரிசுத்த மேனியும் அடக்கஸ்தலத்திலிருந்து இதே வகையில் அழகிய முறையில் வெளியே எடுக்கப்பட்டது .

பரிசுத்த மேனியின் கபன் துணியும் , அவர்களது முகத்திலிருந்த முடியும் அப்படியே அப்பழுக்கின்றி இருந்தன . இப்பெரியோர்களின் பிரேதங்களைக் கண்டவர்கள்  , ' இவை 1300ஆண்டுகளுக்கு முன்னுண்டான பிரேதங்கள் தாமா ? '  என்று நம்பமுடியவில்லை . ஆனால் , பிரஸ்தாபமேண்மை மிக்க திரேகங்கள் இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு முன்னே இறந்துபட்டவர்களின் தேகங்களைப் போன்று புத்தம் புதியனவாய் தென்பட்டன .இது மட்டிலுமல்ல . பிரஸ்தாப இரு பெரியார்களான ஸஹாபா பெருமக்களின் நேத்திரங்கள் இரண்டும் திறந்திருந்தன . அவை நல்ல பளிங்கு போல் பளபளப்புடன்   தென்பட்டன . இதைக் கண்ட அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவர்களின் கண்களை முத்தமிட துடித்தன . ஆனால் எவருக்கும் அனுமதி கிடைக்கவில்லை . 

மாபெரும் டாக்டர்களான வைத்தியர்கள் பலர் இந்நிகழ்ச்சியைக் கண்டு திடுக்கிட்டனர் . ஒன்றும் புரியாமல் திகைத்தனர் . பிரஸ்தாப நிகழ்ச்சியின் போது பிரபலமான ஜெர்மன் கண் டாக்டர் ஒருவர் இருந்தார் . இவர் இந்நிகழ்ச்சியின் போது ஆர்வமாக பங்கு கொண்டார் . அவர் இத்தகைய தோற்றத்தைக் கண்டதும்  ,பிரஸ்தாப பெரியார்களான ஸஹாபாக்களின் பிரேதங்கள் , கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே ஒன்றும் புரியாமல் ,இராக் பிரதம முப்தி அவர்களின் கரங்களைப் பிடித்துக் கொண்டு , 'தங்களின் மார்க்கமான இஸ்லாம் சாத்தியமானது தான் ' என்பதற்கு இந்த  ஸஹாபாக்களின்    பெருமைமிக்க இந்த நிகழ்ச்சியை விட வேறு என்ன ஆதாரம் வேண்டியிருக்கிறது ? இதோ யானும் முஸ்லிமாகி விட்டேன்  . 'லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ' என்று கூறி முஸ்லிமாகி விட்டார் .

இத்தகைய சந்தர்ப்பத்தில் திரைப்படம் பிடிக்கும் ஒரு ஜெர்மன் கம்பெனி , அதிக தொலை தூரத்திலிருந்தெல்லாம் இந்நிகழ்ச்சியைக் காண வந்திருந்தவர்களை பெரிய  உபகாரம்  செய்தது . பிரஸ்தாபப் படம் எடுக்கும் கம்பெனியார் ,இராக் அரசின் அனுமதி பெற்று தங்கள் செலவிலேயே ஒரு காரியம் செய்தனர் . 

அடக்கஸ்தலத்தின் மேலே இருநூறு அடி உயரமுள்ள நான்கு கம்பாஸ்களின் மீது ஏறக்குறைய முப்பது அடி நீளமும் , இருபது அடி அகலமும் உள்ள டெலிவிஷன் திரைகளைப் பொருத்தினர் . இதனால் அங்கு குழுமியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் நின்றவண்ணமாகவும் , அமர்ந்தவண்ணமாகவும் பிரஸ்தாப அடக்கஸ்தலங்களிலிருந்து கவ்ரவமிக்க இரு ஸஹாபா பெருமக்களின்  பிரேதங்களைத் திறப்பதையும் , வெளியே எடுப்பதையும் தங்கள் கண்களால் நிதர்சனமாக நல்ல முறையில் காணும் சந்தர்ப்பம் கிட்டியது .

மறுநாள் பக்தாது நகரிலுள்ள சினிமா காட்சி சாலைகளில் எல்லாம் இந்நிகழ்ச்சி திரையிடப்பட்டு மக்களுக்கு காண்பிக்கப்பட்டது . இவ்விஷய நிகழ்ச்சிக்குப் பின் பக்தாது நகரிலேயே ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது . அளவற்ற வகைகளில் யூதர்களும் ,கிருஸ்தவர்களும் தங்கள் குடும்பத்தாருடன் எவ்விதக் கட்டாயமுமின்றி பள்ளிவாயில்களுக்கு வந்து மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் . நிதர்சனமான இந்நிகழ்ச்சி பண்டைய கால வரலாற்று ஏடு  அல்ல .

இது நமது காலத்திலேயே நமது கண்களால் நிதர்சனமாக கண்ட ஒரு நிகழ்ச்சியாகும் .இத்தகைய அதிசயம் கி.பி.1932ஆம் ஆண்டில் நடந்த ஒரு விஷயமாகும் . இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு மதத்தினரும் ,அந்நிய நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் கண்ணாரக் கண்டனர் . அகிலத்திலுள்ள பல பத்திரிகைகள் விஷேசமாய்ப் பிரசுரம் செய்தனர் . அன்றியும் ,இவ்வடக்கஸ்தலங்கள் பெயர் தெரியாத ஒரு சிலரைச் சார்ந்ததல்ல . இறுதி நபியாம் முஹம்மது ﷺ அவர்களது அந்தியத்த நண்பர்களான இரு ஸஹாபாக்களின் பிரேத நிகழ்ச்சியாகும் . அவர்கள் யாரென்பதை முஸ்லீம் உலகம் முன்னரே அறியும் .அவர்கள் எத்தகையோர் என்பதை முஸ்லீம் உலகம் ஏற்றுக் கொண்டே இருக்கின்றது .தற்சமயமோ ஆயிரக்கணக்கான மக்கள் பிரஸ்தாப அடக்கஸ்தலத்திற்கு சென்று தரிசித்து வருகின்றனர் . "


Jamiul Karamath

இவை போன்ற இன்னும் பல அற்புதங்களை அறிய ஆவலுள்ளவர்கள் அல்லாமா ஷைகு யூசுபுந் நபஹானி   رضي الله عنه  அவர்களது 'ஜாமியுல் கராமாத் ' என்னும் நூலை நோட்டமிடுக  .

எதோ சொற்ப நபர்கள் மட்டும் இத்தகைய பதவியடைந்துள்ளார்கள் என்றெண்ண வேண்டாம் . 

' ஏகரப்பில் ஆலமீனருட்களான வேழை பங்காளர் கோடி... 
 தேகமழியாத நற்பாகம் படைத்த மசித்தர்களனந்தங்கோடி  '

என்பதாய் குணங்குடி மஸ்தான் சாஹிப் அப்பா   رضي الله عنه  அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள் . எனவே மேற்சொன்ன பல சான்றுகளைக் கொண்டு அன்பியா , அவ்லியாக்களது சடலங்கள் மவுத்திற்குப் பின்னும் அழியாது . அவர்கள் ஹயாத்துள்ளவர்கள் என்பது தெளிவாக அறியமுடிகின்றது .

     
குர்ஆன் ,ஹதீஸ் , இஜ்மா ,கியாஸ் ஆகியனவற்றுக்கு முற்றிலும் மாற்றாக அன்பியா ,அவ்லியாக்களுக்கு மவ்த்த்திற்குப் பிறகு எந்த சக்தியுமில்லை  என்றும் கபூருக்குள் எலும்புக்கூடாகிலும் கிடைக்குமா என்பதே சந்தேகம் தானென்றும் , அவர்களது ரோமம்  
உட்பட மடிந்து உக்கியிறந்து மண்ணோடு மண்ணாகி விட்டதென்று கூறி விதண்டாவாதம் செய்பவர்கள் இனியேனும் அறிவு பெறுவார்களாக ! அறிஞர்களையடுத்து  அறியாமையைப் போக்கிக் கொள்வார்களாக !





 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...