Monday 31 January 2022

அத்தஸவ்வுப் - 2

 தொகுப்பு - அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்பிர்ரஸூல்,அஷ் ஷெய்குல் காமில்,அஷ் ஷாஹ் ஷெய்கு முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாழில்  பாகவி ஸூஃபி காதிரி காஹிரி قدس الله سره العزيز


வெளியீடு : ஹிஸ்புல்லாஹ் சபை,ஸூஃபி மன்ஸில்,காயல்பட்டணம்-628204.

வெளியீட்டு தேதி : ஹிஜ்ரி 1432,ரபீயுல் அவ்வல் பிறை 12 .
ஈஸவி 2011,பிப்ரவரி 16.

*** اَلتَّصَوُّب  | அத்தஸவ்வுப்-ஸூபிஸம் ***

சுருதி,யுக்திப் பிரமாணத்தாலும்,இறைவனை அறிந்த மெஞ்ஞானிகளான ஆரிபீன்களின் 'தவ்கு' என்னும் அனுபவ அறிவினாலும் அறியப்பட்டது : -

எதார்த்தத்தில் பரம்பொருளான அல்லாஹுதஆலாவும்,அவனுடைய செயல்களுமே அல்லாது வேறொன்றுமில்லை. வாஜிபுல் உஜூதான - எப்போதும் உளதாக இருப்பது அவசியமான மெய்ப்பொருளான அல்லாஹுதஆலாக்கு உருவமும்,காலதேச எல்லைகளும் வேறெவ்வதிக் கட்டுப்பாடுகளும் இல்லை. அப்படி இருந்தும் அந்த அரூபியான,வாஜிபுல் உஜூதான அல்லாஹுதஆலாவில் அரூபத்தன்மை கெடாமல் மும்கினுல் உஜூதான - உளது,இலது இவை இரண்டும் அவசியமில்லாத சிருஷ்டிகள் தோன்றுகின்றன.

அவன் தனது இல்மில்--அறிவில் இருந்ததை ஒன்றன்பின் ஒற்றாகவும் ஒன்றன் வழியாகவும் வெளிப்படுத்துகிறான்- படைக்கிறான். முந்தின
சிருஷ்டி இரண்டாவது சிருஷ்டிக்கு ஸபபு - காரணமாகவும், இரண்டாவது சிருஷ்டி முந்தின சிருஷ்டிக்கு முஸப்பபு-காரியமாகவும் இருந்த
போதிலும் முந்தயது இரண்டாவதை படைக்கவில்லை.

முந்தியதை எப்படி அல்லாஹுதஆலா
படைத்தானோ அதைப்போல் இரண்டாவதையும் அவனேதான் படைத்தான். முந்தியது எப்படி
அவனுடைய தத்துவம் எனும் கரத்தில்
அகப்பட்டிருக்கிறதோ அதைப் போல் பிந்தியதும் அவனுடைய தத்துவக்கரத்திலேயே அகப்பட்டிருக்கிறது.

அவனன்றி ஓர் அணுவும் ஆடவோ
அசையவோ முடியாது.

இப்படி ஒன்றன் பின்னொன்று அதன் பின் மற்றொன்றாக இப்படியே சங்கிலித் தொடரைப்
போன்று வெளியாகிக்கொண்டிருக்கிற அகில
உலகத்தின் சகல சிருஷ்டிகளும் அந்த மெய்பொருளான ஹக்கு தஆலாவைக் கொண்டே நிலைத்
திருப்பதினால் அவை அனைத்தும் " அஃராளு- ஆதேயம்" எனவும், " ளில்லு-  நிழல்" எனவும்,இன்னும் இதே கருத்தைக் கொண்டு அவைகள்
 " கியால்-  கற்பனை" எனவும் ஸூபிய்யாக்களான மெஞ்ஞானிகள்
சொல்லுகிறார்கள். இவை
அனைத்திற்கும் நிலைக்களம் ஹக்கு தஆலாவின் உஜூதேயாகும்.

மேலும் இரண்டாவது சிருஷ்டி முந்திய சிருஷ்டிக்குப்பிற்பாடு வருவதினாலும், அதைச்
சார்ந்திருப்பதினாலும் முந்தியதை இரண்டாவதற்கு " ஹகீக்கத்து, தாத்து-தற்சொரூபம்" " ஜௌஹர்-
ஆதாரம்" என்றும், இரண்டாவதை இரண்டாவதை முந்தியதின்
 " அறளு- ஆதேயம்" என்றும் " ஸிபத்து-இலட்சணம்" " பிஃலு - செயல்" என்றும்சொல்வார்கள்.

ஆகவே உலகம் பூராவும் " அஃறாள்-
ஆதேயங்களும்" ஜவாஹிறு-ஆதாரங்களுமாகும்.
ஹக்கு தஆலாவைக்கொண்டு நிலைத்திருப்பதால் சகல வஸ்துகளும் அவனைக் கொண்டு தரிபாடாக இருக்கின்றன. இதனால் " ஹகாயிகுல் அஷ்யாயி தாபிதுன்-வஸ்த்துகளின் எதார்த்தம் தரிப்பாடானது" என்று சொல்வார்கள்.

ஸுபஸ்த்தாயிகள் என்பவர்கள் " ஆலம் -  அகிலம்" என்பது கனவு.அதற்கு  நிலைக்களம் மனிதனின்  கற்பனையேயாகும்   என்று  சொல்கிறார்கள். இது சுத்த தவறான கொள்கையாகும்.

 " வஹ்தத்துல் உஜூது - உஜூது ஒன்று" என்று சொல்பவர்களிடத்தில் நகலிய்யத்- சுருதி பிரமாணத்தாலும், அகலிய்யத் -யுக்தி பிரமாணத்தாலும், கஷ்பிய்யத் -காட்சி அனுபவப் பிரமாணத்தாலும் உஜூதாக- உளதாக இருப்பது ஹக்கு ஸுபுஹானஹுவதஆலாவின் உஜூதாகவே இருக்கும்.

அவனுடைய தாத்தானது-தத்சொரூபமானது
அவனுடைய உஜூதுக்கு ஐனானதாக- தானானதாகவே ஆகும், வேறானது அல்ல.

முதகல்லிமீன்களான உஸூலுடைய உலமாக்கள் அவனது தாத்தாகிறது அவனுடைய உஜூதுக்கு
வேறானதும், அதை வேண்டுவதுமாகும் என்று
சொல்கிறார்கள்.

சரியான சொல்முந்தினதுவேயாகும். உஜூது ஒன்று, தாத்து இரண்டு பலது என்று சொல்வதும் பிழையானதுவாகும்.

مَعرِفَتُا اللَّهِ - மஃரிபத்துல்லாஹ் - அல்லாஹுதஆலாவை அறிவது : 


அல்லாஹுதஆலாவை அறிவது மூன்று வழிகளாகும் :-

1. " تَنزِیهُ - தன்ஸீஹின்" படி அறிவதாகும் .அதாவது: 
அவனுடைய தாத்து,
சிபத்துகளின் புறத்தினால் அவனுக்கு இலாயிக்கல்லாதவைகள் 
அடங்கலை விட்டும் பரிசுத்தமானவன் என்று
அறிவதாகும். இவ்வழி குறைவான வழியாகும்.

2. " تَشبِیهُ -  தஷ்பீஹின்" படி அறிவதாகும்.அதாவது:- " مُتَشَابِهت முதஷாபிஹான-நேர் பொருள்
பொருந்தாத திருக்குர்ஆன் வசனங்களை அவைகளின்
நேரடியான பொருள்களிலேயே சுமத்தாட்டுவதும். இன்னும் அவனுடைய தாத்து, சிபத்துகளின் புறத்தினால் சிருஷ்டிகளுடைய உருவங்களையும்,உருப்புகளையும் அவனுக்கு தரிப்படுத்துவதாகும்.
இவ்வழி குப்ரான வழியாகும். அல்லாஹுதஆலா இவைகளை விட்டும் மிக உயர்வாகி
பரிசுத்தமாகிவிட்டான்.

3. "  تَنزِیهُ -  தன்ஸீஹு" க்கும் " تَشبِیهُ - 
தஸ்பீஹு " க்கும் இடையில் சேகரமாக்கிய படியும்,பின்பு   تَنزِیهُ مَحَض -கலப்பற்ற தன்ஸீஹின் படியும்
அறிவதாகும்.

அதாவது: " لَیسَ کَمِثلِهِ شَیءًُ -   லைஸக மித்லிஹி ஷைவுன்" - அவனைப் போன்று ஒரு வஸ்துமில்லை "
( 42-11 ) என்று புறத்தினால்  அவன் சொன்னது போல் அவனுடைய தாத்தின் எவ்விதவிதமான      எல்லையும்,கட்டுபாடும், கோலமும் இல்லை என்று நம்புவதும்,

" وَلَهُ کُلُّ شَیٍ -  வலஹு குல்லு ஷையின்-
அவனுக்கு எல்லா வஸ்துவும் உண்டு " (27-91) என்று அவன் சொன்னது போல் அவனுக்கு அவனுடைய
சிபாத்தின் புறத்தினாலும் படி تَخَلِّیَات தஜல்லிய்யாத்தின்-தோற்றங்களின் புறத்தினாலும் முன்பு மறுக்கப்
பட்டவைகள் எல்லாம் உண்டு என்று நம்புவதும்,

அல்லாஹுதஆலாவுக்கு வேறொருபொருள் அறவே இல்லாததினால் வேறொன்றைக்கொண்டு
ஒப்பானவனில்லை என்றும்" தஸ்பீஹ் " உடைய கோலங்களில் வெளியானவனாக இருப்பதுடன் அவன் முன் இருந்த" தன்ஸீஹ் " யை விட்டும் பேதகமாகவுமில்லை என்று நம்புவதும்,

இன்னும்" தன்ஸீஹானது " அவனுக்கு அவனுடைய தாத்தைப் பொருத்ததாகும்," தஷ்பீஹானது " அவனுடைய மள்ஹரை வெளியாகும் ஸ்தானத்தைப் பொருத்ததாகும் என்று நம்புவதும்,

 " شبكان بك رب العزة عما يصفون - ஸுபுஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யசிபூன் " சிறப்புடைய உம்முடைய போஷகன், அவர்கள் வர்ணிக்கும் வர்ணிப்பை விட்டும் பரிசுத்தமானவன் " ( 37:180) என்று சொன்னது போல் அவன் தன்ஸீஹ்,தஷ்பீஹ் இவை இரண்டிலேயும் கட்டுப்பட்டவனில்லை என்று நம்புவதுமாகும்.இவ்வழிதான் பரிபூரணமான வழியாகும்.


அல்லாஹுதஆலாவின் உஜூதிற்கு கோலமில்லை,எல்லையுமில்லை,கட்டுப்பாடுமில்லை.அப்படி தன்ஸீஹாக இருப்பதுடன் கோலத்திலும்,குணப்பாட்டிலும்,எல்லையிலும் வெளியானது - தோன்றியது கோலமின்மை,எல்லையின்மையில் நின்றும் அது எதன் பேரில் இருந்தத  அதைவிட்டும் பேதகப்படவுமில்லை.ஆதியில் எதன் பேரில் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது.

சங்கைக்குரிய ஷெய்குல் அக்பர் முஹையத்தீன் இப்னு அரபி قدس الله سره العزيز அவர்கள் ' புஸூஸுல் ஹிகம்' என்ற நூலில் சொன்ன கவிகளின் கருத்தும் இதுதான்.

" فَاِن قُلتَ بِا لتَّنزِیهِ کُنتَ مُقَیِّدً • وَاِن قُلتَ بِالتَّشبِیهِ   کُنتَ مُحَدِّدً 
وَاِن قُلتَ بِا لاَمرَینِ کُنتَ مُسدِّدً • وَکُنتَ اِمَامًا فيِ  المَعَارِبِ سَیِّدً
فَمَن قَالَ بِا لاِشفَا عِ كَانَ مُشَرِّ کاً • وَمَن قَالَ بِالاِفرَ ادِکَانَ مُوَحِّدً
فَاِیَّاكَ وَالتَّشبِیهَ اِن کُنتَ ثَانِیًا •وَ اِیَّکَ وَالتَّنزِیهَ اِن کُنتَ مُفرِدً "


 " நீன்" தன்ஸீஹை " கொண்டு (மட்டும்" தஷ்பீஹ் " இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை
" தன்ஸீஹ் " உடைய சூரத்தை - கோலத்தைக் கொண்டு) கட்டுப்பாட்டுக்குள் ஆக்கிவிட்டாய், நீன் " தஷ்பீஹ் " கொண்டு (மட்டும்" தன்ஸீஹ் " இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை" தஷ்பீஹ் " உடைய கோலத்தைக் கொண்டு) எல்லைக்குள் ஆக்கிவிட்டாய், நீன் (தன்ஸீஹ். தஷ்பீஹ் எனும்)
இரண்டு கருமங்களையும் கொண்டு சொன்னால் நேரான வழியில் ஆனவனாகவும் மஃரிபாவில்
மெஞ்ஞானங்களில் இமாமாகவும், தலைவனாகவும் ஆகுவாய்,

ஆகவே எவன் (ஒன்றாகிய ஹக்கை
அவனோடு கல்கை சிருஷ்டியை தரிபடுத்துவது கொண்டு) இரண்டாக்கி சொல்வானேயானால் அவன் (உஜூதில் கல்கை ஹக்கோடு) கூட்டாக்கியவனாகுவான், எவன் ஒன்றாக்கி சொல்வானேயானால்
அவன் (ஹக்கை உஜூதில் ஒன்றாக்கி ஒன்றென்று
தரிபடுத்தி அவனோடு அவனல்லாததை தரிப்படுத்தாததினால்) முவஹ்ஹிதாக (ஒன்றாக்கியவனாக)
ஆகுவான்.

ஆகையினால் நீன் (ஹக்கையும், கல்கையும் இரண்டு என்று சொல்லி) இரண்டாக்குவாயானால் (கல்கை ஹக்கோடு தரிபடுத்தி அவனை அதைக்கொண்டு) ஒப்பாக்குவதை பயந்துக்கொள் !தவிர்த்துக் கொள் !!

(எனினும் கல்கை ஹக்குடைய தஜல்லியாத்தின் சூரத்து-வெளிப்பாட்டின் கோலம் என்றும்,
அது தன்னிலே மவ்ஜூது- உளதானது அல்ல என்றும் தரி படுத்துவது அவசியமாகும்) நீன் ஒன்று என்று சொன்னால் தன்ஸீஹ் செய்வதை தவிர்ந்து கொள்!

இன்னும் அந்த உஜூதாகிறது ஒன்றேயாகும். ஆனால் உடைகளாகிறது பலதாக இருக்கும்.
உஜூதில் பலது என்பது மள்ஹருடைய - வெளியாகும் ஸ்தானத்தினுடைய புறத்தினாலேயேயாகும்.

" وَمَا الوَجهُ اِلّاَ وَاحِدُغَیرَ اَنَّهُ • اِذَا اَنتَ اَعدَدتَّ اَامَرَ ایَا تَعَدَّدَ " 

 " முகம் ஒன்றையல்லாதில்லை, எனினும் நீ கண்ணாடிகளைப் பலதாக்குவாயானால் அது பலதாகி
விடும்"

சகல சிருஷ்டிகளும் அந்த உஜூதான
உளதான ஹக்கு தஆலாவை விட்டும் நீங்கி இருக்காது.

ஆகவே சிருஷ்டிகளை உண்டாக்குவதற்கு முன்பும், பின்பும் அந்த உஜூது ஹக்குதஆலா
ஒருவனுக்கு மட்டுமேயாகும்.
உலகமாகிறது அதன்
சகலபாகங்களுடன் அஃராளு ஆதேயங்களாகும்.ஆதாரமாகிறது அந்த உஜூதேயாகும்.

 اِنَّمَا الكَونُ حِیَالًُ فَهُوَ حَقًُ فِي الحَقِیقَةِ • کُلُّ مَن یَفهَمُ هَذَا حَازَ اَسرَ ارَالطَّرِیقَةِ 

 " நிச்சயமாக கௌன்-  சிருஷ்டிகள் கற்பனையானதாகும், எதார்த்தத்தில் அவனே ஹக்கானவனாகும், இதைவிளங்கிய ஒவ்வொருவரும்
தரீகத்தின் இரகசியங்களை சேகரித்துக்கொண்டார்"
என்று சங்கைக்குரிய மகான் ஷெய்குல் அக்பர்  முஹ்யித்தீன் இப்னு அரபி رضي الله عنه அவர்கள் பாடிய கவியின் கருத்தும் இதுவாகும்.

உலகம் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அதற்கு உஜூது இல்லை. கண்ணாடியில் பதியும்
கோலத்தை போன்றும், தாகித்தவன் கானல் நீரை பார்த்து தண்ணீர் என்று எண்ணுவது போன்றாகும்.
மெய்பொருளான ஹக்கான ஒருவனான அல்லாஹ்வின் உஜூதை தவிர வேறொன்றுமில்லை.

( ---- தொடரும் ) 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...