Tuesday 23 June 2020

வஸீலா - 3

ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி ஹழ்ரத்  رحمه الله


இஸ்த்திஆனத்தும் குர்ஆனும் :

இறை வேதமாகிய குர்ஆனையும் , ஹதீஸையும் நமது சிந்தனைக்கு நாம் உட்படுத்தும் பொழுது நபிமார்களும் ,அவர்களின் தோழர் பெருமக்களும் அவசியத்தின் போது இறைவனுடைய படைப்புகளிடம் உதவி தேடியுள்ளனர் . இது பற்றிய சில வசனங்களை இப்பொது நாம் பார்ப்போம் ,


يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌
" ஓ ! விசுவாசிகளே ! நீங்கள் அல்லாஹ்வின் (மார்க்கத்திற்கு ) உதவியாளர்கள் . மர்யமுடைய மைந்தர் ஈஸா ஹவாரிய்யூன்களை நோக்கி , அல்லாஹ்வுடைய தரப்பிலிருந்து எனக்கு உதவி செய்பவர் யார் என்று கேட்ட பொழுது , அதற்கு ஹவாரிய்யூன்கள் நாங்கள் அல்லாஹ்வின் (மார்க்கத்திற்கு ) உதவியாளர்கள்  என்று கூறினர் . "

[அல் குர்ஆன் : ஸுரா ஸஃப் , வசனம் 14]

இந்த வசனத்தில் அல்லாஹ் , மூஃமின்களிடம் தனது மார்க்கத்திற்கு உதவி தேடுகின்றான் . இவ்வாறே ஸெய்யிதினா ஈஸா عليه السلام  அவர்கள் ஹவாரிய்யூன்களிடம் உதவி தேடுகின்றனர் . இனி இறைவன் விரும்பியிருந்தால் எல்லா வகையான உதவிகளையும் எந்தவொரு வாஸிதா (இடைப்பொருளும் ) வும் இன்றி இறக்கியிருக்க முடியும் . 

ஆனால் இப்பூவுலகை ஒரு காரணத்திற்குரிய உலகமாக படைத்திருப்பதால் அவன் ஒவ்வொன்றையும் ஒரு காரணத்தை கொண்டே வெளிப்படுத்துகின்றான் . இதை வல்ல நாயன் அடுத்த வசனத்தில் வெளிப்படுத்துவதை பாருங்கள் ,


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ‏
"  விசுவாசிகளே ! நீங்கள் அல்லாஹ்வின் (மார்க்கத்திற்கு )  உதவி செய்யுங்கள் . அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் . இன்னும் உங்கள் பாதங்களை ஸ்திரப்படுத்துவான் ".

[அல் குர்ஆன் - ஸுரா முஹம்மத் ,வசனம் 6]

இந்த வசனத்தில் எவரிடமும் எந்த தேவையுமற்ற அல்லாஹ் முஃமின்களிடம் தனது மார்க்கத்திற்கு உதவி தேடுவதை பாருங்கள் . இதன் முலம் அவன் முஃமின்களின் தரத்தை உயர்த்துவதையும் பாருங்கள் . 

قَالَ مَا مَكَّنِّىْ فِيْهِ رَبِّىْ خَيْرٌ فَاَعِيْنُوْنِىْ بِقُوَّةٍ
" எதன்  மீது எனது இரட்சகன் எனக்கு வல்லமை தந்துள்ளானோ அந்த வல்லமையைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள் என்று (ஸிக்கந்தர் துல்கர்னைன் ) கூறினார் . "

[அல் குர்ஆன் : ஸுரா கஹ்ஃப், வசனம் 95]


قَالَ اجْعَلْنِىْ عَلٰى خَزَآٮِٕنِ الْاَرْضِ‌ۚ اِنِّىْ حَفِيْظٌ عَلِيْمٌ
" (யூசுப் அலைஹிஸ்ஸலாமவர்கள் ) சொன்னார்கள் .என்னை பூமியுடைய செல்வங்களுக்கு அதிகாரியாக நியமனம் செய்யுங்கள் . நிச்சயமாக நான் அறிபவனாகவும் , பாதுகாப்பவனாகவும் இருப்பேன் . "

[அல் குர்ஆன் : ஸுரா யூசுப் , வசனம் 55]

இந்த வசனத்தில் பூமியுடைய செல்வங்களின் அதிகாரியாக தன்னை நியமிக்க வேண்டுமென ஸெய்யிதினா யூசுப் عليه السلام அவர்கள்    அல்லாஹ்விடம் கேட்கவில்லை . மாறாக அப்போதிருந்த அரசனிடம் கேட்டார்கள் . இவ்வாறு கேட்டதால்  ஸெய்யிதினா யூசுப் عليه السلام அவர்கள்  ஷிர்க் செய்து விட்டார்களென்று யாராவது சொல்ல முடியுமா ? (நவூது பில்லாஹ் ) 

قَالَ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏
" (ஸுலைமான் அலைஹிஸ்ஸலாமவர்கள் ) சொன்னார்கள் . சபையோரே ! உங்களில் யார் அந்த சிம்மாசனத்தை அவர்கள் எனக்கு வழிபட்டவர்களாக எனது தர்பாருக்கு வந்து சேருமுன் கொண்டு  வருபவர்கள் ? (என்று கேட்டார்கள் ) ". 

[அல் குர்ஆன் : ஸுரா நம்ல், வசனம் 38]

அண்ணல் நபியிடம் இஸ்த்திஆனத் :       

இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் வரிசை படுத்த துவங்கினால் அதுவே ஒரு நூலாக விரிந்து விடுமாகையால் இங்கே ஒரேயொரு ஹதீஸை மட்டும் உங்களின் பார்வைக்கு தருகிறோம் .


" ஹழ்ரத் ரபீஆ رضي الله عنه‎ அவர்கள் கூறுகின்றனர் . நான் அண்ணல் நபி  صلى الله عليه و سلم  அவர்களுடன் ஓரிரவு தங்கியிருந்தேன் . அதுபோது நபியவர்கள் ஒழு செய்வதற்காக தண்ணீரும் ,வேறுசில அவசியத்திற்குரிய பொருட்களையும் (மிஸ்வாக் போன்றவை ) அவர்கள் முன் கொண்டு வந்து வைத்த பொழுது , நபியவர்கள் என்னை நோக்கி ,கேள் என்றனர் . அதற்கு நான், உங்களுடன் சுவனத்தில் உங்களின் தோழமையை கேட்கின்றேன் என்று சொல்ல ,   அதற்கு நபியவர்கள் ; இன்னும் ஏதாவது என்று கேட்டனர் .அதற்கு நான் ,என் விருப்பம் இது மட்டுமே என்று சொல்ல , நபியவர்கள் ; உமது நப்ஸின் மீது அதிகமான ஸுஜூது கொண்டு எனக்கு உதவி செய் என்றனர் ."

[ நூல் : மிஷ்காத்  ஷரீப் , பக்கம் 82 ] 

கவனியுங்கள் . ஹழ்ரத் ரபீஆ رضي الله عنه அவர்கள்  , அண்ணல் நபி صلى الله عليه و سلم  அவர்களிடம் தாம் விரும்புவதைக் கேட்கின்றனர் . அதுகேட்ட நபியவர்களும்  ரபீஆவை நோக்கி , நீர் என்னிடம் என்ன கேட்கிறீர் என்பது உமக்கு விளங்கவில்லையா ? உமக்கு சுவர்க்கம் வேண்டுமெனில் அதை அல்லாஹ்விடம் அல்லவா கேட்க வேண்டும் ? சுவர்க்கத்தை நான் எப்படி தர முடியும் ? என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் ! ஆனால் அதற்கு மாறாக நபியவர்கள் சுவர்க்கத்தை குறித்து வாக்குறுதி அல்லவா தருகின்றனர் ! 

அத்துடன் அவரிடம் அதிகமா ஸுஜூது கொண்டு எனக்கு உதவி செய்தால் உமக்கு சுவர்க்கத்தில் உமது நபியுடைய தோழமையும் கிடைக்கும் என்றல்லவா கூறுகின்றனர் ! அவ்வாறாயின் நபியவர்களால் சுவர்க்கத்தை தரமுடியும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் . அடுத்து அல்லாமா முப்தி முல்லா அலி காரி رحمة الله அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதை பாருங்கள் ,


" அண்ணல் நபி صلى الله عليه و سلم  அவர்கள் பொதுவாகத் தான் கேட்கின்றனர் . (மாறாக ஏதாவதொரு பொருளை குறிப்பிட்டு அதை மட்டும் கேள் என்று சொல்லவில்லை ) இதைக் கொண்டு   நபியவர்களுக்கு அல்லாஹ் அவனுடைய கஜானாவிலிருந்து எதை வேண்டுமானாலும் கொடுப்பதற்குரிய அதிகாரத்தை தந்துள்ளான் என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம் . இன்னும் இப்னு ஸப்ஃ  போன்றோர் நபியவர்களின் தனித்தன்மை பற்றி கூறும்போது , அல்லாஹ் நபியவர்களுக்கு சுவர்க்கத்துடைய   பூமியை ஜாகீராக ஆக்கித்தந்துள்ளானாகையால் அதிலிருந்து நபியவர்கள் எதை யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ கொடுப்பார்கள் என்று கூறுகிறார் ."

[ நூல் : மிர்காத் , பாகம் -2 ,பக்கம் 323 ] 

அடுத்து மேற்கண்ட ஹதீஸுக்கு அஹ்லே ஹதீஸ் வஹாபி உலமாக்களில் பிரபலமானவரான நவாப் சித்தீக் ஹசன்கான்  போபாலி   என்பவர் விளக்கம் தரும் போது , 

" நபியவர்கள் பொதுவாகவே கேள் என்றுதான் சொல்கிறார்களே அன்றி குறிப்பிட்ட எந்தவொரு பொருளையும் சுட்டிக்காட்டி கேள் என்று சொல்லவில்லை ,ஆதலால் இதைக்கொண்டு அனைத்து காரியங்களும் நபியவர்களின் திருக்கரத்தில் அவர்களின் ஹிம்மத்தை கொண்டு அமைந்துள்ளது என்பதால் எதை யாருக்கு அவர்கள் விரும்புகிறார்களோ அதை அவர்கள் தனது இறைவனின் உத்தரவைக் கொண்டு அருள் புரிவார்கள் . "

[ நூல் :  மிஸ்க்குல் கிதாம் ,பக்கம் 276 ] 

இதுபோன்றே அல்லாமா அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رحمة الله‎ அவர்கள் , இமாம் பூஸிரி  رحمة الله‎ அவர்களது புர்தாவின் " ஃபஇன்ன மின் ஜூதிக்கத் துன்யா வழர்ரதஹா வமின் உலூமிக்க இல்மல் லவ்ஹி வல்கலமி  " என்னும் கவிதைக்கு விளக்கமளிக்கும் பொழுது " யா ரஸூலல்லாஹ் ! இம்மையும் மறுமையும் தங்களது பேரருளின் ஒரு பகுதியாகும் . இவ்வாறே லவ்ஹும் ,கலமும் உங்களது கல்வியின் ஒரு பகுதியாகும் . ஆகையால் (மனிதாகிய ) நீ இம்மை மறுமையின் பேற்றை விரும்பினால் நபியவர்களின் சன்னிதானத்திற்கு வா ! உனக்கு தேவையானதை கேள் ! என்கின்றனர் ."

[ நூல் : அஷ்அத்துல் லம்ஆத் ,பாகம் -1 , பக்கம் 396]

ஆகையால் இதுவரை நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள குர்ஆனின்  வசனங்களையும் , திருநபியவர்களின்  ஹதீஸ்களையும் உங்களது கவனத்தில் வைத்துக் கொண்டவர்களாக இப்போது மனித உணர்வுகளின் தாக்கத்தால் செயல்படும் அறிவுடைய தூண்டுதலால் எழுகின்ற எதிர் வாதத்தையும் பாருங்கள் . சிலருடைய நாவு எவ்வளவு தூரம் எல்லை கடந்து போய் விடுகிறது என்பதையும் பாருங்கள் . 

வஹாபியக்    கொள்கையுடைய இஹ்ஸான் இலாஹி ஜஹீர் என்பார் தமது  "அல் பரேல்விய்யா " என்னும் நூலில் 63ஆம் பக்கத்தில் கீழ்கண்டவாறு எழுதுகின்றார் . 

" அல்லாஹ் தனது வேதத்தில் பல்வேறு நபிமார்களை பற்றியும் ஸாலிஹீன்களான நல்லடியார்களை பற்றியும் பேசுகின்றான் . அவர்கள் வாழுகின்ற காலத்தில் அவர்களுக்கும் துன்பங்கள் ,சோதனைகள் போன்றவை ஏற்பட்ட போது அவர்களுக்கும் உதவி ,ஒத்தாசை மற்றும் அடுத்தவர்களின் பிரார்த்தனை போன்றவைக்குரிய அவசியம் நேர்ந்துள்ளன . இருப்பினும் அவர்களில் ஆதமிலிருந்து நூஹ் வரை , இப்ராஹீமிலிருந்து மூஸா வரை , யூனுஸிலிருந்து அஷ்ரபுல் முர்ஸலீன் முஹம்மத் பின் அப்துல்லாஹ் ஸலாவதுல்லாஹி வஸலாமுஹு அஜ்மயீன் வரை யாருமே அல்லாஹவையன்றி வேறு யாரிடத்திலும் உதவி தேடவில்லை .

அல்லது உதவிக்காக வேறு யாரையும் அழைக்கவில்லை . அது பாவமன்னிப்புக்குரிய விஷயமாக     இருந்தாலும் சரி , அல்லது ஒரு குழந்தையைக் குறித்தாகவோ , அல்லது ஒரு வியாதியிலிருந்து சுகம் பெறுவதற்குரியதாகவோ , அல்லது ஒரு அழிவிலிருந்து தப்புவதற்குரியதாகவோ , அல்லது வறுமையை நீக்குவதற்குரியதாகவோ , அல்லது சிறை கூடத்திலிருந்து விடுதலை பெறுவதற்குரியதாகவோ ,அல்லது வேறு எந்த மாதிரி உதவியாக இருந்த போதிலும் சரியே . 

அவர்கள் அல்லாஹ்விடம் மட்டுமே பிராராதித்தார்கள் .  உதவி தேடினார்கள் .அதற்கு மாறாக அவர்களில் யாரேனும் அல்லாஹ்வையன்றி அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார்களிடமோ அல்லது அல்லாஹ்வால் அங்கீகரிப்பட்ட அவ்லியாக்களிடமோ உதவி தேடினார்கள் என்பதற்குரிய எந்தவொரு ஆதாரமும் நமக்கு குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ காணக் கிடைக்கவில்லை   .  "

மீண்டும் ஒருமுறை நாம் மேலே கூறியுள்ள திருக்குர்ஆனின் வசனங்களையும் , திரு நபியவர்களின் ஹதீஸ்களையும் கவனமாக படித்துப் பாருங்கள் . ஏனெனில் மேற்கண்ட இஹ்ஸான் இலாஹியின் கூற்றில் எவ்வளவுதான் உண்மைக்குரிய எதார்த்தத்தை நாம் தேடிய போதிலும் அதை கொஞ்சம் கூட பார்க்க முடியவில்லை . இனி நபிமார்கள் என்போர் எப்படிப்பட்டவர்கள் எனில் அவர்களுடைய வஸீலாவை கொண்டுதான் நாமே நமது கோரிக்கைகளை இறைவனிடம் சொல்கின்றோம் . 

இந்நிலையில் அவர்கள் இறை சன்னிதானத்தில் இறைவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பதால் அவர்கள் எதையாவது கேட்பதாக இருந்தால் நேரடியாக கேட்கலாமென்னும் போது அவர்களுக்கு வஸீலாவுக்குரிய அவசியமென்ன ? ?  ?  



 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...