Tuesday 14 August 2018

கபூரை முத்தமிடலாமா ? - 1



அவ்லியாக்களுடைய ஜியாரத்திற்குச் செல்பவர்களில் சிலர் கபூரையோ அல்லது வாசற்படியையோ முத்தமிடுகிறார்கள் . இதுபற்றி ஒரு கூட்டத்தார் இன்கார் செய்கின்றார்கள் . இன்கார் செய்வதற்கு இடமில்லை .ஏனெனில் ,அவ்வாறு கபூரை முத்தமிடுவதும் ,வாசற்படியை முத்தமிடுவதும் ஆகுமான காரியங்கள் என்பதற்கு ஆதாரங்கள் பல உள்ளன .

 " ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதை ஆதாரமாகக் கொண்டு ஸாலிஹீன்களுடைய கபுருகளை பறக்கத்துடைய நாட்டத்துடன் முத்தமிடலாம் என்று ஆரிபீன்களான உலமாக்கள் சிலர் கூறுகின்றனர் "  என்பதாய்  இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ
رضي الله عنه   அவர்கள்  'தவஷீஹ்' என்ற நூலில் குறிப்பிடுதாய்  'இஹ்லாக்குள் வஹ்ஹாபீன்'  என்ற நூலில் வந்துள்ளது .

ஹஜ்ருல் அஸ்வத்தை பற்றி நாம் தெரிந்திருப்பது  அவசியமாகும் .

அமீருல் மூஃமினீன் ,பாரூக்குல் அஃலம் ஹழ்ரத்  உமர் رضي الله عنه   அவர்கள் ,ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டு கொண்டு ,பின்பு   " சந்தேகமின்றி நீ ஒரு கல் . உன்னை முத்தமிடுவதால் நீ நன்மை செய்வதுமில்லை ,முத்தமிட்டால் நீ தீமை செய்வதும் இல்லை . நபி கரீம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  உன்னை முத்தமிடாதிருந்தால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்  " என்று கூறினார்கள் .

இதைக் கேட்ட ஞானத்தின் தலைவாயில் அமீருல் மூஃமினீன் ஹழ்ரத்  அலீ  رضي الله عنه   அவர்கள்  ," உமர் அவர்களே ! சற்று நிதானியுங்கள் ! நாவைப் பேணுங்கள் ! முத்தமிடுவதால் இந்தக் கல் நிச்சயம் பிரயோஜனத்தைக் கொடுக்கின்றது . முத்தமிடாவிட்டால் நஷ்டத்தை கொடுக்கிறது " என்று உரைத்தார்கள் .


அவர்களது கூற்றுக்கு விளக்கம் தரும்படி   ஹழ்ரத்  உமர் رضي الله عنه   அவர்கள் கேட்கவே ,  ஹழ்ரத்  அலீ  رضي الله عنه   அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்தார்கள் .

  " இல்லா மனித்தகத இன்தர் ரஹ்மானி அஹ்தா "

"ரஹ்மானிடம் அறுதிமானம் எடுத்துள்ளவனைத் தவிர " என்று திருமறையில் இறைவன் கூறியுள்ளதன் கருத்து யாதெனில் ,ஆன்ம உலகில் நாம் அல்லாஹ்விடம் ,  அறுதிமானம்  செய்த உறுதிப் பிரமாணம் இந்த கல்லின் வாயினுள் வைக்கப்பட்டிருக்கிறது .

அந்த அறுதிமானம் வார்த்தைப்பாடு , எழுதப்பட்டுள்ள சத்திய நாமாவையே நாம் முத்தம் இடுகிறோமே அன்றி கல்லையல்ல , நாம் அங்கு காட்டுகின்ற மரியாதை ஒழுக்கம் யாவும் கல்லுக்காக அல்ல .

"ஹஜ்ருல் அஸ்வத் உலகில் அல்லாஹ்வின் கரம் ( யமீனுல்லாஹி )  " என்பதாக கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள் .

உமர் அவர்களே ! இதற்கப்பாலும் தாங்கள் இதை சாதாரணமான கல்தானே என்றே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் போலும் "  என்று ஹழ்ரத்  அலீ  رضي الله عنه   அவர்கள்  உரைத்து விளக்கினார்கள் .


இவ்வகமியம் ஹழ்ரத்  உமர் رضي الله عنه   அவர்களுக்கு  வெளிப்பட்டதும் , "அலி இல்லாவிட்டால் உமர் ஹலாக்காகி இருப்பார் " என்று ஹழ்ரத்  உமர் رضي الله عنه   அவர்கள் கூறினார்களாம் .

இவ்வாறான விபரம் ,  மிர்காத்-ஷரஹு-மிஷ்காத் 3ஆம் பாகம் பக்கம் 214 , 'உம்தத்துல் காரீ- பீ  - ஷரஹி-ஸஹீஹில்-புஹாரி ',பாகம் 2,பக்கம் 266, 'இர்ஷாதுஸ் ஸாரீ-ஷரஹீ-ஸஹீஹில்-புஹாரி ', பாகம் 3,பக்கம் 156 முதலியவற்றிலும் 'பத்ஹுல் கதீர்'  , ஷரஹுல் இனாயா அலல் ஹிதாயா முதலிய பிக்ஹ் கிரந்தங்களிலும் காணலாம் .

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ جَرِيرٍ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْحَجَرِ ‏ "‏ وَاللَّهِ لَيَبْعَثَنَّهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ لَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا وَلِسَانٌ يَنْطِقُ بِهِ يَشْهَدُ عَلَى مَنِ اسْتَلَمَهُ بِحَقٍّ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏

 [ اب الحج عن رسول الله صلى الله عليه وسلم                                    
 جامع الترمذي ]

"கியாமத்து நாளில் ஹஜ்ருல் அஸ்வத்துக்கு இரண்டு கண்கள் இருக்கும் . அவற்றைக் கொண்டு பார்க்கும் . நாவும் இருக்கும் .தன்னை முத்தமிட்டவர்களைப் பற்றி சாட்சி கூறும் " என்று நபிமணி صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் உரைத்துள்ளார்கள் என்பதாக ஹழ்ரத் இப்னு அப்பாஸ்  رضي الله عنه   அவர்களைக் கொண்டு இமாம் இப்னு மாஜா  رضي الله عنه   அவர்களும் , இமாம் பைஹக்கீ  رضي الله عنه   அவர்களும் ரிவாயத்துச் செய்துள்ளார்கள் .

மேலும் " அது தன்னை முத்தமிட்டவர்களைப் பற்றி சாட்சி கூறி அவர்களுக்காக ஷபாஅத்து செய்யும் " என்று உம்முல் மூஃமினீன் அன்னை ஆயிஷா நாயகி   رضي الله عنه   அவர்களைக் கொண்டு ,இமாம் தபறானி   رضي الله عنه   அவர்கள் ரிவாயத்துச் செய்துள்ளார்கள் என்பதாக அல்லாமா காஜீ உபைதுல்லாஹ் ஸாஹிப்  மதராஸீ
 رضي الله عنه   அவர்கள் 'துஹ்பதுலஸ்  ஸாயிரீனில்' கூறியுள்ளார்கள் .

ஆகவே மானிட வர்க்கத்தின் அஹது நாமா , சத்திய உறுதிப்பாடு பதிவேட்டை தன்னுள்ளடக்கிக் கொண்டிருக்கும் , ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடுவதை ஆதராமாக்கிக் கொண்டே ,அந்த கல்லையும் விட  மேன்மையான இன்ஸான் காமிலை தன்னகத்துக்குள்ளே அடக்கிப் பெற்றிருக்கக் கூடிய கபூரை பரக்கத்தை நாடி முத்தமிடுதல் ஆகுமான காரியமே என்பது ஆரிபீன்களுடைய சொல்லாகும் .

இக்கல்லைக் கொண்டு நன்மை, தீமை  உண்டாகக் கூடியதாய் இருந்தால் அவ்லியாக்களின் கபுருகளை நல்லெண்ணத்துடனும் ,தூய மனதுடனும்  பரக்கத்தைக் கருதி முத்தமிடுவதில் பிரயோஜனம் இல்லாமல் இல்லை  என்பது இதன் மூலம் தெளிவாகிறது .

முஸ்னத்


மர்வான் மதீனா நகரில் அதிகாரியாக இருந்த காலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது . ஸஹாபிகளில் ஒருவரான அபூ அய்யூப் அல் அன்சாரி       رضي الله عنه   அவர்களை நபிகள் நாயகம்    صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களுடைய கபூர் ஷரீபின் மீது தமது முகத்தை வைத்து புரட்டிக் கொண்டிருப்பவராக மர்வான் கண்டார் .

உடனே ,அந்த ஸஹாபியின் பிடரியைப் பிடித்துக் கொண்டு " நீர் என்ன காரியம் செய்கிறீர் என்பதை அறிவீரா  " என்று  வினவினார் .

அந்த ஸஹாபி ஹழ்ரத் அபூ அய்யூப்  رضي الله عنه   அவர்கள் ,மர்வானின் பக்கமாகத் திரும்பி ,ஆம் ! நான் அறிவேன் ! மண்ணும் கல்லும் இருக்குமிடத்திற்கு நான் வரவில்லை . ரஸூலுள்ளாஹி
  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களுடைய  சன்னதிதானத்திற்கு வந்திருக்கின்றேன் "  என்று கூறினார்கள் . 

இந்நிகழ்ச்சியைப் பற்றிய ஆதாரம்  இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رضي الله عنه   அவர்களது . 'முஸ்னத்' ,5வது பாகம் , 423வது பக்கத்தில் காணப்படுகின்றது . இமாம் ஹாக்கிம் رضي الله عنه   அவர்கள் இந்த அறிவிப்பை 'ஸஹீஹ்' என்று  தமது 'அல் -முஸ்தத்ரக்' ,பாகம் 4, ஹதீத் எண் 515ல் கூறியுள்ளனர் .இதனை இமாம் தஹபி رضي الله عنه   அவர்கள் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் .


மேலும் இந்த ஹதீதை   (1) இப்னு ஹிப்பான் தமது ஸஹீஹ் ஹிலும்(2)இமாம் தபறானீ رضي الله عنه   அவர்கள்  தமது முஜ்அம் அல் கபீர் (4:189) மற்றும் 'அஸ்வத்' திலும்  (3) அல் ஹைத்தமீ தமது 'அல்-ஜவாயித்' (5:245 மற்றும்  5:441 ) (4) இமாம் ஸுப்கீ தமது 'ஷிபா உஸ் ஸிகாம்' 126வது பக்கத்திலும்  (5) இப்னு தைமிய்யா தனது  அல்-முன்தகா (2:261) விழும் குறிப்பிட்டுள்ளார்கள் .


"  நபி பிரான்   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் வீற்றிருந்து குத்பா ஓதிக் கொண்டிருந்த மிம்பர் படியை ,ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் 
     رضي الله عنه   அவர்கள் தமது கையால் தொட்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள் " என்பதாய் 'ஷரஹுஸ் ஷிபா'  153வது பக்கத்தில் சொல்லப்டுள்ளது .

"ஸெய்யிதினா இமாம் ஹசன்  رضي الله عنه   அவர்களும் , இமாம் ஹுஸைன்  رضي الله عنه   அவர்களும் வாகனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர்  رضي الله عنه   அவர்களும் மற்றும் சில சஹாபா பெருமக்களும் அவ்விருவரும் கால்களை தொட்டுக் கொண்டிருந்த அங்கவடிகளை முத்தமிட்டார்கள் " என்ற விபரம் 'பஸ்லுல் - கிதாப்' ,77வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது .

"தாய் ,தந்தையருடைய கப்ருகளை முத்தமிடுவது ஆகும் என்பதாய் 'பதாவா ஆலம்கீர் ' , 'கன்ஜூல் இபாத் பீ ஷரஹில் மிஷ்காத்' ஆகிய நூல்களில் வந்துள்ளது என்று அல்லாமா முஃப்தீ மஹ்முது ஸாஹிப் மதராஸீ  رضي الله عنه   அவர்கள் 'ஸுல்குல் முஅள்ளம்'  நூலில் கூறுகின்றார்கள் .

மேலும் இமாம் பைஹக்கீ  رضي الله عنه   அவர்களைக் கொண்டு , அல்லாமா ஷைகு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி  رضي الله عنه   அவர்கள் 'தர்ஜுமா மிஷ்காத்' , 1வது பாகம் , 633வது பக்கத்தில் ரிவாயத்துச் செய்திருக்கின்றார்கள் .

நபிகள் நாயகம்   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் சமூகம் ஒருவர் வந்து , " நாயகமே ! சுவர்கத்து வாசல்படியையும் ,ஹுருல் ஈன் பெண்களையும் முத்தமிடுவதாக நான் சத்தியம் செய்து கொண்டேன் .இதற்குப் பரிகாரமென்ன ? "  என்று விண்ணப்பித்தார் .

அதற்கு நாயகம்     صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் , "உங்கள் தாயுடைய காலையும் ,தகப்பனுடைய முகத்தையும் முத்தமிட்டு கொள் " என்று சொன்னார்கள் .

"தாய் ,தந்தை இல்லாவிட்டால் என்ன செய்வது ? " என்றார் அவர் .

"உனது தாய் ,தந்தையருடைய கபூரை முத்தமிட்டுக் கொள் " என்றார்கள்  நாயகம்   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் .

மீண்டும் அவர் ,"அவர்களின் கபுறுகளின் அடையாளங்கள் காணப்படாவிட்டால் என்ன செய்வேன் " என்று வினவினார் .

அதற்கு , நபி பெருமானார் நாயகம்   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் ,"இரண்டு கோடுகளைக் கீறி அவற்றில் ஒன்றை அன்னையின் கபூராகவும் , மற்றோன்றை தந்தையின் கபூராகவும் எண்ணிக் கொண்டு நீ முத்தமிடு !உமது சத்தியத்தை முறிக்காதீர் !"என்று கூறினார்கள் .

இந்த ஹதீது ' கன்ஜூல் இபாத் ' , 'தில்க்க அஷரத்துன் காமிலா' ஆகிய நூற்களில் வருவதாக தொண்டி ,காஜி , மவ்லானா முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் அவர்களின் பத்வாவில் குறிப்பிடப்பட்டடுள்ளது.

இந்த பத்வாவை சரிக்கண்டு ,நாகப்பட்டிணம் அல்லாமா அபுல் கைர் அஹ்மது இப்ராஹீம் அவர்களது தந்தை மவ்லானா ஸெய்யித் முஹம்மது இப்னு காஜா முஹம்மது ,நாகூர் கனி தம்பி என்றழைக்கப்படும் மவ்லானா முஹம்மது ஆலிம் ஸாஹிபு , நாகூர் தர்கா உஸ்தாது அல்லாமா நயினார் முஹம்மது சாஹிபு அவர்களும் 'கபூரை முத்தமிடுதல் ஆகும்' என்று கையொப்பங்கள் செய்திருக்கின்றனர் .

மேற்கண்ட ஹதீது , 'கிபாயத்துஷ் ஷுஃ மீ'    நூலில் வருவதாக ,முஃப்தீ ஹைதர் ஷா பெங்களூரி அவர்கள் 'துல்பஹார் ஹைதரிய்யா ' ,139வது பக்கத்தில் கூறுகின்றார்கள் .

"வித்தாரமான சன்மார்க்க ஞானமுடைய இமாம் ஸுப்கீ   رضي الله عنه   அவர்கள் ,இமாம் நவவீ  رضي الله عنه   அவர்களது காலடிப்பட்ட இடத்தை முத்தமிடும் பாக்கியம் பெற்றேனே என்று ஆனந்தத்துடன் கூறிக் கொண்டே அந்த இடத்தில் தமது முகத்தை வைத்து முத்தி முகந்து புகட்டினார்கள் "  என்பதாய் 'பஸ்லுல் கிதாப்' 98வது பக்கத்திலும் , 'பத்ஹுல் முஈன் உடைய ஷரஹு ஈஆனா ',1வது பாகம் , 18வது பக்கத்திலும் வந்திருக்கின்றது .


'பரக்கத்தை நாடி கபூரை முத்தமிடுதல் நான்கு மத்ஹபு பிரகாரம் ஆகுமானதே ' என்று அல்லாமா ஷெய்கு அப்துல் கனி நாபிலூசி முஹக்கிக் ஹனபி  رضي الله عنه   அவர்கள் 'ஜம்உல் அஸ்ராரில்' கூறுவதாக அல்லாமா ஷெய்கு யூசுபுன் நபகானீ மிஸ்ரி  رضي الله عنه   அவர்கள் ,'ஷவாஹிதுல் ஹக்'  56வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் .

Tahqeeq-ul-Haqq-ul-Mubeen

"கபூரை வாயால் முத்தமிடுவதும் , கரத்தால் தொட்டு முத்தி முகருவதும் ஆகும் . அவ்விதம் செய்வது ஸாலிஹீன்களான உலமாக்களின் செயலாகும் " என்று ஹழ்ரத் ஷாஹ் அஹ்மத் ஸயீத் முஜத்தித் திஹ்லவி  رضي الله عنه   அவர்கள் , 'தஹ்கீக்குள் ஹக்கில் முபீன் ' ,33வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .

ShawahidUlHaq-ImamNabhani

"அவ்லியாக்களின் கபுருகளை பரக்கத்தை நாடி முத்தமிடுவது ஆகும் என்று பெரும்பான்மையான இமாமகள் கூறியுள்ளனர் " என்பதாக அல்லாமா ஷெய்கு    யூசுபுன் நபகானீ மிஸ்ரி  رضي الله عنه   அவர்கள் ,'ஷவாஹிதுல் ஹக்'  57வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.               

"வலிமார்களின் கபுருகளை பரக்கத்தை நாடி முத்தமிடுவது ஆகுமா ?" என்று அல்லாமா இமாம் முஹம்மது கலீலீ மக்தஸீ  رضي الله عنه   அவர்களிடம் கேட்கப் பட்ட பொழுது ,"அப்படிச் செய்வது விலக்கப்பட்ட காரியமல்ல ,ஆகுமான காரியமே "என்று பதில் சொல்லியுள்ளார்கள் .இவ்விபரம் 'பதாவா கலீலீ' , 2வது பாகம் ,250வது பக்கத்தில் காணலாம் .

பத்ஹுல் பாரி


" குரானை முத்தமிடுவதும் ,ஹதீதுகளுடைய பகுதிகளை முத்தமிடுவதும் , ஸாலிஹீன்களுடைய கபுருகளை முத்தமிடுவதும் ஆகுமானவைகளே " என்று இமாம் இப்னு அபீ ஸைபு எமனி ஷாபிஈ  رضي الله عنه   அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படுவதாய் ஷெய்குல் இஸ்லாம் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ  رضي الله عنه   அவர்கள் ஸஹீஹுல் புகாரியின் ஷரஹு கிதாபாகிய 'பத்ஹுல் பாரி', 3வது பாகம் ,309வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .

உம்ததுத்துள் காரீ பீ ஷரஹில் புஹாரி

" நிச்சயமாக சில ஸாலிஹீன்கள் குரான் ஷரீபைக் கண்டால் முத்தமிடுவார்கள் , ஹதீது ஷரீபின் பகுதிகளைக் கண்டால் முத்தமிடுவார்கள் , ஸாலிஹீன்களின் கபூர் ஷரீபுகளைக் கண்டால் அவற்றை முத்தமிடுவார்கள் " என்று   ஷெய்குல் இஸ்லாம் இமாம் பதுருத்தீன் மஹ்முது ஜனீ  ஹனபீ   رضي الله عنه   அவர்கள் 'உம்ததுத்துள் காரீ பீ ஷரஹில் புஹாரி ' , 4வது பாகம் ,607வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .

" குர்ஆன் ஷரீஃபையும் ,நபிகள் நாயகம்   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களுடைய கபுரு ஷரீபையும் , அன்பியா ,அவ்லியாக்களுடைய கபுரு ஷரீஃபையும் , முத்தமிடுவதும் 
உலமாக்கள் ,ஸாலிஹீன்கள் , தாய் ,தந்தையர்கள் , முத்தையவர்களைப் போன்றவர்களுடைய கை ,கால்களை முத்தமிடுவது ஸுன்னத்தாகும் . " என்று இமாம் இப்னு அபிஸ் ஸைபு யமானீ رضي الله عنه   அவர்கள் போன்ற ஷாஃபிஈ மத்ஹபின் இமாம்கள் சொல்லியிருப்பதாக அல்லாமா ,முப்தி முஹம்மது தமீம் ஸாஹிபு மதராஸீ رضي الله عنه   அவர்கள்  'உம்தத்துஸ் ஸிப்யான்'  281ம் பக்கத்தின் ஹாஷியாவில் கூறுகின்றார்கள் .

நிஹாயத்துள் முஹ்தாஜ் பீ ஷரஹில் மின்ஹாஜ்

"அவ்லியாக்களின் ரவ்லா கப்ரு ஷரீபின் வாசற்படியை பரக்கத்தை ஆதரவு வைத்து முத்தமிடுவது மக்ரூஹ் என்பது கிடையாது .அது ஆகுமான காரியமே "  என்று இமாம் ஷம்ஷுத்தீன்  றமலி رضي الله عنه   அவர்கள் பத்வா கொடுத்திருப்பதாய் , 'நிஹாயத்துள் முஹ்தாஜ் பீ ஷரஹில் மின்ஹாஜ் ' ,2வது பாகம் ,218வது பக்கத்தில்  காணக் கிடைக்கின்றது . 'நிஹாயா' வில் வருவதாக ஷாஹ் முஹையத்தீன் ஸாஹிபு வேலூரி رضي الله عنه   அவர்கள் , 'பஸ்லுல் கிதாப் ' 115வது பக்கத்தில் குறிப்பிட்டு ,பல ஆதாரங்களுடன் விரிவாகக் கூறுகின்றார்கள் .

" பரக்கத்தை நாடி கபுறுகளையும் ,அவற்றின் வாசற்படியையும் முத்தமிடுவது மக்ரூஹ் அல்ல ஆகுமானதே "    என்று அல்லாமா நூருத்தீன் மிஸ்ரி رضي الله عنه   அவர்கள் பலமான பத்வா விடுத்துள்ளார்கள் .

அல்லாமா மக்தூம் ஹாஜீ முஹம்மது ஜிஷ்தி சிந்தீ ஹனபி رضي الله عنه   அவர்கள் ஹிஜ்ரி 11ஆம் நூற்றாண்டில் உள்ளவர்கள் . இவர்கள் ஹதீது ,பிக்ஹ் முதலியவற்றை திரட்டி இருப்பதுடன் , ஷரஹுகளும் எழுதியுள்ளார்கள் .

" அவ்லியாக்களின் கபுறுகளையும் ,அவற்றின் வாசற்படியையும் பரக்கத்திற்கா முத்தமிடலாமா ? "        என்று அவர்களிடத்தில் வினவப்பட்ட  போது , "அவ்விதம் செய்வது ஆகும் என்பதே மார்க்கத்தின் தீர்ப்பும் ,பலமான சொல்லுமாகும் "  என்று விடை அளித்துள்ளார்கள் .

இவ்வாறாக முப்தி ஹைதர் ஷாஹ் காதிரி رضي الله عنه   அவர்கள் 'துல்பஹார்  ஹைதரிய்யா ' 145வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்கள்.

"வலிமார்களுடைய வாசற்படியை முத்தமிடுவது அவர்களை சங்கைப்படுத்துவதாகும் " என்று குத்வத்துல் ஆரிஃபீன் , இமாம் முஸ்த்தபல் பக்ரி ஹனபி திமிஷ்கி رضي الله عنه   அவர்கள் 'லம்உ பர்க்கில்  மகாமத்'  தில் சொல்லியுள்ளார்கள் என்பதாக அல்லாமா ஷெய்கு யூசுபுன்னபஹானி மிஸ்ரி رضي الله عنه   அவர்கள் 'ஷவாஹித்துள் ஹக்'  ,254வது பக்கத்தில் அறிவித்துள்ளார்கள் .    

"வலிமார்களுடைய கபுறுகளை அல்லது அவற்றின் வாசற்படியை முத்தமிடுவது 'தவாளுஉ' என்னும் பணிவான ஒழுக்கத்தோடு கூடிய மரியாதையைச் சார்ந்ததாகும் "     என்று அல்லாமா ஷாஹ் முஹையித்தீன் ஸாஹிபு ஆரிபுபில்லாஹி காதிரி வேலூரி  رضي الله عنه   அவர்கள்  'பஸ்லுல் கிதாப்' 98வது பக்கத்தில் கூறுகின்றார்கள் .







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...