Friday 22 December 2017

கப்ரு ஜியாரத் கூடுமா ? - 1


அல்லாஹ்வின் தனிப்பட்ட அருளுக்கும் ,அன்புக்கும் பாத்தியப்பட்ட நாதாக்களான அவ்லியாக்கள் ,மஹான்களது கப்ரு ஷரீபுக்கு சென்று ஜியாரத்துச் செய்வது ஆண் ,பெண் இரு பாலருக்கும் ஸுன்னத்தும் ,முஸ்தஹப்பும் ஆகும் .

நபி பெருமானார்   அவர்கள் தங்களது அன்னையின் கபூருக்குச் சென்று ஜியாரத்து செய்திருக்கின்றார்கள் . மேலும் அவர்கள் உஹது களத்தில் ஷஹீதான ஸஹாபாக்களுடைய கப்ருகளுக்குப் போய் ஜியாரத்துப் புரிந்திருக்கின்றார்கள் . ஸஹாபாக்களையும் ,மற்றவர்களையும் ஜியாரத்திற்குப் போகும் படியாக ஏவி இருக்கின்றார்கள் . அங்கனமே ஸஹாபாக்களும் ஜியாரத்துச் செய்திருக்கின்றார்கள் . இவ்விபரங்களைப் பற்றிய ஆதாரங்கள் ஸஹீஹ் ஸித்தா ஹதீது கிரந்தங்களிலும் , மிஷ்காத்து ஷரீபிலும் வந்துள்ளன .

عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ 
 "‏ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وَتُذَكِّرُ الآخِرَةَ ‏"‏ ‏.‏
[ இப்னு மாஜா ,ஹதீத் எண் 1639 ] 

" நபிகள் நாயகம்    அவர்கள் சஹாபாக்களை நோக்கி ,நான் உங்களை கப்ருகளை ஜியாரத்துச் செய்வதை விட்டும் விலக்கி வந்தேன் . (ஆனால் ) இப்போது அவைகளை ஜியாரத்துச் செய்யுங்கள் (என்று ஏவுகிறேன் ) . ஏனெனில் நிச்சயமாக அது மறுமை வாழ்க்கையை நினைவூட்டக்கூடியதாக இருக்கிறது "  என்று திருவாய் மலர்ந்தருளிய  ஹதீது மிஷ்காத் ஷரீபிலும் , ஸஹீஹு முஸ்லிம் , இப்னு மாஜா ,திர்மிதீ ,அபூ தாவூத் ,நஸயீ முதலிய ஹதீது கிரந்தங்களிலும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது . 

திருநபி   அவர்களது இத்திருவாக்கை கவனிக்கும் போது கபுருகள் இருக்கும் தலங்களுக்கு சென்று  ஜியாரத் செய்ய வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டதெல்லாம் நல்ல மனதைப் பெற்று , நற்கிரியைகளை அனுஷ்டித்து மோட்ச கதியை அடைய வேண்டும் என்பதற்கேயாம் .

"கபுருகள் மறுமையைப் பற்றி ஞாபகப்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன " என்ற நாயக வாக்கியமும் 'ஸஹீஹ் முஸ்லீம் ' கிரந்தத்தில் காணப்படுகின்றது .

எனவே கபுருகள் மறுமை வாழ்க்கையை நினைவூட்டக் கூடிய ஞாபகார்த்த சின்னங்களாகவே இருக்கின்றன என்பதை ஹதீதுகள் எண்பித்துக் காட்டுகின்றன .

எம்பெருமானார்   அவர்கள் வபாத்தான பின்பு , உம்முல் முஃமினீன் செய்யிதத்தினா ஆயிஷா ஸித்திக்கா رضی اللہ عنھا அவர்களது இல்லத்திலேயே தபன் செய்து அடக்கப் பட்டார்கள் .  ஆயிஷா நாயகி  رضی اللہ عنھا அவர்கள் திறந்த முகத்துடன் அந்த அறைக்கு சென்று தங்களது கணவர் பெருமான் நாயகம்   அவர்கள்அவர்களையும் , வேறு இடத்தில் அடக்கமாகி இருக்கும் தங்களது சகோதரர் ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் رضي الله عنه   அவர்களது கபுருக்கும் சென்று ஸலாம்  உரைத்து அவர்களை ஜியாரத்து செய்திருக்கின்றார்கள் . தங்களது அருமை தந்தை ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் சித்திக் رضي الله عنه அவர்களது வபாத்தான பின்பு அந்த அறையிலேயே அடக்கம் செய்யப்பட்ட பின்பும் திறந்த முகத்துடனே ஜியாரத் செய்வது வழக்கம் .  

பாரூக்குள் அஃலம் ஸெய்யிதினா உமர் பாரூக் رضي الله عنه   அவர்கள் வபாத்தானதும் அவர்களும் அந்த அறையிலேயே அடக்கம் செய்யப் பெற்றார்கள் . அன்று முதல் அன்னை ஆயிஷா நாயகி رضی اللہ عنھا   அவர்கள் நாணத்துடன் முகத்தை மூடியவர்களாக 'புர்காவுடன்'  ஜியாரத்    செய்து வரலானார்கள் . இவ்விபரம் மிஷ்காத் ஷரீபில் கூறப்படுகின்றது . 

இதே போன்று அன்னை ஆயிஷா நாயகி رضی اللہ عنھا   அவர்கள் அறிவிக்கிறார்கள் :


أخبرنا أحمد بن جعفر القطيعي ثنا عبد الله بن أحمد بن حنبل حدثني أبي ثنا حماد بن أسامة أنبأ هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها قالت : كنت أدخل بيتي الذي فيه رسول الله صلى الله عليه و سلم و أني واضع ثوبي و أقول إنما هو زوجي و أبي فلما دفن عمر معهم فو الله ما دخلت إلا و أنا مشدودة علي ثيابي حياء من عمر رضي الله عنه

[ஆதாரம் : முஸ்னத் இமாம் அஹ்மத் ,பாகம் 6, பக்கம் 202,ஹதீத் எண் : 25701 ]

மேலே கண்ட ஹதீதைக் கொண்டு தெளிவாக தெரிய வருவது யாதெனில்  ;

கப்ருகளில் ஸாலிஹீன்கள் ஹயாத்துடனே இருக்கிறார்கள் என்பதும் ,அவர்களை யார் யார் ஜியாரத்துச் செய்கிறார்களோ அவர்களை அந்த ஸாலிஹீன்கள் நன்கு அறிகிறார்கள் என்பதும் தெளிவாகப் புலனாகின்றது .

இக்காரணம் பற்றியே அவர்களை ஜியாரத்துச் செய்பவர்கள் 'அதபு' மரியாதையுடன் ஜியாரத்துச் செய்வது கடமை ,வாஜிபு என்றும் இவர்களின் பதவிக்கு தக்கவாறு ஹயாத்தாயிருக்கம் காலத்தில் அவர்களுடன் ஒழுகி நடப்பது போல ,வஃபாத்திற்குப் பின்னும் அவர்களை ஹயாத்தானவர்களாகவே இருக்கிறார்கள் என்பதாகக் கருதி மரியாதையுடனும் ,பேணுதலுடனும் நடந்து கொள்வது அத்தியாவசியமாகின்றது .

ஏனெனில் , ' தன்னை ஜியாரத்துச் செய்யும் மனிதர்களுக்கு    அவர்களின் ஒழுக்கம் பக்திக்கு தக்கவாறு வலிமார்களின் உதவி உபகாரம் உண்டாகும் ' என்று ஷெய்குல்  ஹிந்த் அல்லாமா அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه  அவர்கள் தர்ஜுமா மிஷ்காத் ,பாகம் 1,656வது பக்கத்தில் எடுத்தறிவிக்கின்றார்கள் .

மேலும் ,'ஸெய்யிதினா பாத்திமா நாயகி رضی اللہ عنھا  அவர்கள்ஸெய்யிதினா ஹம்ஜா رضي الله عنه  அவர்களுடைய கப்ரை ஜியாரத் செய்வதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போய் வந்தார்கள் ' என்பதாக ஷெய்குல் இஸ்லாம் இமாம் பக்ருத்தீன் ஐனீ ஹனபீ رضي الله عنه  அவர்கள் உம்தத்துல் காரீ ஷரஹ் புகாரியில் உரைத்துள்ளார்கள் .
உம்தத்துல் காரீ ஷரஹ் புகாரி

'ஆண் ,பெண் யாவரும் வலிமார்களுடைய கப்ரு ,ஜியாரத்திற்காக போவது முஸ்தஹப்பாகும்  ' என்று பதாவா ஹம்மாதியா , பஹ்ருர் ராயிக் , ஜாமிஉர் ரூமுஸ் ,ரத்துல் முக்தார் முதலிய கிரந்தங்களை கூறுகின்றன .


மேலும் , 'கப்ருகளை ஜியார்த்துச் செய்கின்ற பெண்களை அல்லாஹுத்தஆலா லஃனத்துச் செய்கின்றான் ' என்ற ஹதீதை சனது -தலீல் பிடித்து சிலர்  ' பெண்கள் ஜியாரத்திற்குச் செல்லக் கூடாது என்று சொல்லுகிறார்கள் ' .இந்த ஹதீதை ஊன்றுதல் பிடிப்பது ஸஹீஹ் ஆகாது . ஏனெனில் இந்த ஹதீத் , ழயீப் என்று ஷெய்குல் இஸ்லாம் முஹத்தித் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி رضي الله عنه  அவர்கள் 'தக்ரீபு' என்ற கிரந்தத்தில் கூறியுள்ளார்கள் .


ஆகையால் இந்த  ழயீபான ஹதீதைக் கொண்டு ஏவல் ,விலக்கல்களுக்கு அத்தாட்சி ஊன்றுதல் பிடிக்கக்கப்படமாட்டாது என்று அல்லாமா ஸெய்யித் அமீர் அலவீ அஜ்மீரீ  

رحمة الله عليه   அவர்கள்  'இஹ்லாக்குல் வஹ்ஹாபீன் ' என்ற நூலில் தக்க சனது ஆதாரத்துடன் விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள் . மேற்சொன்ன நூலை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்கள் பலர் சரி கண்டு ஒப்பம் வைத்துள்ளார்கள் .



'அவ்லியாக்கள் ,உலமாக்கள் உடைய கப்ருகளை பெண்களும் ஜியாரத்துச் செய்வது ஸுன்னத்தாகும் . அது விலக்கப்பட்டதல்ல ' என்று இமாம் ஷெய்கு முஹம்மது கலீலீ ஷாபிஈ رضي الله عنه  அவர்களுடைய பதாவா கலீலீ , 2வது பாகம் , 251வது பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது . 

இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் சில பெண்கள் ஜியாரத்திற்கு செல்லும் சந்தர்பங்களில் அங்கு நின்று ஒப்பாரி வைப்பதும் ,கூக்குரலிடுவதுமாக இருந்தனர் . அந்தச் சந்தர்ப்பத்தில் கண்மணி நாயகம்   அவர்கள் ,'கப்ருகளை ஜியாரத்துச் செய்யும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக ' என்று கூறினார்கள் . பின்பு , 
நாயகம்   அவர்கள் ,'நான் முன்பு உங்களை ஜியாரத்தை விட்டும் விலக்கி வந்தேன் . இப்போது நீங்கள் ஜியாரத்துச் செய்யுங்கள் ' என்று உரைத்து ஜியாரத்தைப் பற்றி ஏவுதல் செய்தார்கள் . இந்த ஹதீதின்படி அந்த ஹதீது மன்ஸுக் - மாற்றப்பட்டதாகி விட்டது என்று முஹத்திதீன்கள் ,முபஸ்ஸிரீன்கள் விளக்கம் தருகிறார்கள் .
    
அபூ தாவூத் ,கிதாப் அல் ஜனாயிஸ் 

ஹழ்ரத் அபூஹுரைரா رضي الله عنه  அவர்களும் , ஹழ்ரத் இப்னு அப்பாஸ் رضي الله عنه  அவர்களும் எடுத்தறிவிக்கும் ஜியாரத்தின் ஏவுதல் பற்றிய ஹதீதின் விளக்கத்தில் , 'நாயகம்    அவர்கள் ,'நீங்கள் ஜியாரத்துச் செய்யுங்கள் (பஜுருஹா ) என்று சொன்னதில் ஆண்களும் , பெண்களும் சேர்ந்து அடைய வளைத்தே சொல்லப்பட்டுள்ளது . இது கொண்டு ஆண் ,பெண் இருபாலருக்கும் ஜியாரத்துச் செய்வதற்கு உத்தரவு கிடைத்துள்ளது ' என்று கூறப்பட்டுள்ளது .

இந்த விபரங்கள் , 'ஷரஹு பர்ஜுக் ' , ' அஷிஅத்துல் லம்ஆத் தர்ஜுமா மிஷ்காத்' முதலிய கிரந்தங்களில் தரப்படுள்ளன .

'ஆண் ,பெண் இருபாலருக்கும், நாயகம்   அவர்களுடைய மேலாம்பரமான திரு ரவ்ளா ,கப்ரு ஷரீபை ஜியாரத்துச் செய்வது வலுப்பமான , குரபாத் (முடுகுதல் ) உடைய புண்ணிய அமல்களில் நின்றுமுள்ளதாகும் . மற்றுமுண்டான அன்பியா அவ்லியாக்களுடைய கப்ருகளை ஜியாரத்துச் செய்வதும் புண்ணியமான நல் அமல்களில் நின்றுமுள்ளதே ' என்று இமாம் ஷம்ஷுத்தீன் றமலீ     رضي الله عنه  அவர்கள் , ஷாபிஈ மத்ஹபின் பிரபல்யமான ஊன்றுதல் மிக்க ஏடான 'நிஹாயத்துள் முஹ்த்தாஜ் -ஷரஹில் மின்ஹாஜ் ' ,2வது பாகம் ,250வது பக்கத்தில் சொல்லியுள்ளார்கள் .இவ்வாறே ஷாபியீ மத்ஹபின் பிரபலமிக்க , ஊன்றுதலான நூலான 'இஆனத்துத் தாலிபீனிலும்' வந்துள்ளது .       
நிஹாயத்துள் முஹ்த்தாஜ்

  

  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...